ETV Bharat / state

ஆசிரியர்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் - சீமான்

author img

By

Published : Dec 31, 2022, 6:33 PM IST

அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர் பெருமக்களை அழைத்துப் பேசி இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று அன்பாக கோரிக்கை வைப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஊதிய உயர்வு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 3000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களில் 180 ஆசிரியர்கள் இதுவரை சரிவர உணவு உட்கொள்ளாததால் வாந்தி மயக்கம் என பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதேபோல் இன்று காலையிலிருந்து 22 ஆசிரியர்கள் மயங்கி விழுந்து முதலுதவி செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கேட்பதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்ட களத்திற்கு வருகை தந்து ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கேட்டிருந்து அவர்களுடன் உரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், "சம வேலைக்குச் சம ஊதியம் தான் ஆசிரியர்களின் கோரிக்கை. ஒரே பணி ஒரே ஒரே ஊதியம் இதுதான் ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது. இதைத் தருகிறேன் என்று கூறிய தமிழக அரசு தற்போது இதை நிறைவேற்றாமல் உள்ளது. ஒரு நாட்டின் ஆகச் சிறந்த வளம் அறிவு வளம். அந்த அறிவை வளர்க்கும் ஆசிரியர் பெருமக்கள் இன்று வீதியில் பட்டினியாய் கிடக்கிறார்கள். அப்படி என்றால் தேசத்தின் அறிவு வீதியில் கிடைக்கிறது என்பது பொருள்.

பத்து திருக்குறளை நினைவில் வைத்துப் பார்க்காமல் படிப்பதற்கு எந்த அமைச்சருக்காவது தைரியம் இருக்கிறதா? ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் காசு இருக்காது, பள்ளிக்கூடத்தைச் சீரமைக்கக் காசு இருக்காது, ஆனால் சமாதி கட்ட காசு இருக்கும் டாஸ்மாக்குகளை புனரமைக்கக் காசு இருக்கும். ஆசிரியர் பெருமக்களாய் இருக்கட்டும், மருத்துவராய் இருக்கட்டும், செவிலியராக இருக்கட்டும், அனைவரும் ஒப்பந்த கூலிகள் ஆகவே நியமிக்கப்படுகிறார்கள். காரணம் நிரந்தர பணியாளர்களாக நியமித்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்பட வேண்டும். ஓய்வூதியம் கொடுக்க அரசாங்கத்திடம் காசு இல்லை என்று கூறுகிறார்கள்.

ஆறு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க் கடன் உள்ளது. சொத்து வரி ஏற்றப்பட்டது, மின் கட்டணம் ஏற்றப்பட்டது, அரிசி பால் தயிர் எரிவாயு என அத்தியாவசிய பொருட்களின் விலை அனைத்தும் உயர்த்தப்பட்டது. நாங்கள் வாழ்வதால் அல்லது வரிகட்டி சாவதா?. ஆசிரியர் பெருமக்கள் வீதிக்கு வந்து விட்டார்கள், மருத்துவர்கள் வீதிக்கு வந்து விட்டார்கள், செவிலியர்கள் வீதிக்கு வந்து விட்டார்கள், உழவர்கள் வீதிக்கு வந்து விட்டார்கள், ஆனாலும் நாங்கள் நல்லாட்சி கொடுத்து வருகிறோம் என்று கூறுகிறார்கள்.

மாறி மாறி இவர்களுக்கு வாக்கு செலுத்தி அதிகாரத்தை நிறுவுகின்ற வரை எந்த மாற்றமும் வராது. மக்களின் பிரச்சினைகளை அரசின் அதிகாரம் கையில் எடுக்காத போது அதிகாரத்தை மக்கள் கையில் எடுக்க வேண்டும் என்ற கோட்பாட்டை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ளதை நிறைவேற்றாமல் இல்லாததை அனைத்தும் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர் பெருமக்களை அழைத்துப் பேசி இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று அன்பாகக் கோரிக்கை வைக்கிறேன். எல்லாவற்றிற்கும் தகுதித் தேர்வு வைக்கிறார்கள். பிரதமருக்கும் முதல்வருக்கும், அமைச்சருக்கும் ஒரு தகுருத் தேர்வு வைத்தால் எங்களுக்கும் அறிவார்ந்த தலைவர் கிடைப்பார்" என கூறினார்.

இதையும் படிங்க: Namma Ooru Thiruvizha: மாட்டிறைச்சி குறித்த சர்ச்சைக்கு அவசியமில்லை: கனிமொழி எம்பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.