ETV Bharat / state

மிக்ஜாம் புயல்: சென்னை விமான நிலையத்தில் விமானங்களை நிறுத்தி வைக்க கூடாது - விமான நிலைய இயக்குநர் அறிவுறுத்தல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 11:02 AM IST

மிக்ஜாம் புயலால் சென்னை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மிக்ஜாம் புயலால் சென்னை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

Michaung storm: புயல் தாக்கத்தின் போது சென்னை விமான நிலையத்தில், விமானங்களை நிறுத்தி வைக்காமல், சென்னைக்கு வெளியே வேறு விமான நிலையங்களில் விமானங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க விமான நிறுவனங்களுக்கு சென்னை விமான நிலைய இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை: சென்னை விமான நிலையத்தில் மிக்ஜாம் புயல் தாக்கத்தை எதிர்கொள்வது குறித்து சென்னை விமான நிலைய இயக்குநர் சி.வி. தீபக் தலைமையில் நேற்று (டிச.03) அவசர ஆலோசனைக் கூட்டம், காணொளி வாயிலாக நடைபெற்றது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மிக்ஜாம் புயல் கரையைக் கடக்கும் வரையில், விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் கொண்ட சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர், மிக்ஜாம் புயல் கரையைக் கடந்து, சகஜநிலை ஏற்படும் வரையில் தொடர்ந்து, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

அதோடு சென்னை விமான நிலையத்தில், ஓடுபாதை பகுதியில் இருந்து மழை நீர் வெளியேறும் கால்வாயை, தொடர்ந்து கண்காணித்து, நீர் தேங்காதபடி, வெளியேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கான பணிகளுக்கு கூடுதல் ஊழியர்களை, பணியில் அமர்த்துவதோடு, கால்வாயில் அடைப்பு ஏதாவது ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கு தேவையான உபகரணங்களையும் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.

விமானம் பாதுகாப்பு: மிக்ஜாம் புயல் சென்னையை தாக்கும் போது, சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, அந்தந்த விமான நிறுவனங்கள், தங்களுடைய விமானங்களை புயல் தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாகவே பெங்களூர், ஹைதராபாத், திருச்சி, கோவை, மதுரை போன்ற விமான நிலையங்களுக்கு கொண்டு சென்று நிறுத்து கொள்வதற்கு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த புயல் பாதிப்பு இருக்கும் நேரங்களில், சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் மட்டுமின்றி, விமான நிலையத்திற்குள் ஓடக்கூடிய பிக்கப் வாகனங்கள், பயணிகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள், பயணிகள் விமானத்திலிருந்து இறங்குவதற்கு விமானத்தில் பொருத்தப்படும் லேடர் ஏணிகள் உட்பட எந்த ஒரு வாகனமும், விமான நிலைய ஓடுபாதை பகுதியில் இயக்குவதற்கு அனுமதி கிடையாது.

விமானங்கள் ரத்து: மேலும் புயல் சீற்றம் தொடங்கியதிலிருந்து, புயல் முழுமையாக கரையைக் கடந்து, சகஜ நிலை திரும்பும் வரையில், விமான நிலையத்தில் எந்த ஒரு விமானமும் இயக்கப்பட மாட்டாது. அந்த நேரங்களில் சென்னை விமான நிலையத்தில் தங்கி இருக்கும் பயணிகள், விமான நிலைய ஊழியர்கள், விமான நிறுவன ஊழியர்கள் உட்பட, சென்னை விமான நிலையத்தை சார்ந்துள்ள அனைத்து ஊழியர்களுக்கும், தேவையான உணவு, குடிநீர் வசதிகளை முன்னதாகவே செய்து வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அதோடு பயணிகள் தங்குவதற்கு கூடுதல் இடவசதி ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது. மின் தடைகள் ஏற்பட்டால், இந்த நேரத்தில் அவசரத் தேவைக்கு தேவையான, ஜெனரேட்டர்கள், இன்வெர்ட்டர்கள் போன்றவைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி: மேலும் சென்னை விமான நிலையத்தின் பின்பகுதியில் ஓடிக்கொண்டிருக்கும் அடையாறு ஆற்றின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதற்கு தனியாக ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் கடந்த 2015 ஆம் ஆண்டு, பெருமழையின் போது, செம்பரம்பாக்கம் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், சென்னை விமான நிலைய ஓடுபாதைகளில் மழை நீர் வெள்ளம் புகுந்து விட்டதால், சென்னை விமான நிலையம் 5 நாட்கள் மூடப்பட்டிருந்தது.

அதைப்போல் 2019ம் ஆண்டில் மீண்டும் செம்பரம்பாக்கம் நீர் அடையார் ஆற்றின் வழியாக விமான நிலைய ஓடு பாதைகளை சூழ்ந்து கொண்டதால்,2 நாட்கள் விமான நிலையம் மூடப்பட்டது. அதைப் போன்ற சூழ்நிலை ஏற்படாமல் இருப்பதற்காக, அடையாறு ஆற்று நீரோட்டத்தை தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது அடையாறு ஆறு முழுமையாக தூர்வாரி, ஆழப்படுத்தப்பட்டு, கரைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளதால், செம்பரம்பாக்கம் தண்ணீரால் விமான நிலையத்திற்கு பாதிப்பு வராது. ஆனாலும் அடையாறு ஆற்று நீரோட்டத்தை மிக தீவிரமாக கண்காணிக்கப்படும்.

மேலும் விமான பயணிகளை பொருத்தமட்டில் வரும் டிசம்பர் 4, 5 ஆகிய இரு தேதிகளில், அந்தந்த விமான நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு, விமான சேவைகள் இயக்கம் குறித்து உறுதிப்படுத்திய பின்பு, பயணம் செய்ய விமான நிலையம் வந்தால் போதும்.

விமானத்தில் பயணிக்க வேண்டிய பயணிகள், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு வந்தால், விமானங்கள் தாமதம் இன்றி புறப்பட்டு செல்ல வசதியாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைகள் பெறப்பட்டு, இந்த அறிக்கைகள் அவ்வப்போது உடனடியாக, அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

அதற்கேற்ப விமான நிறுவனங்கள், தங்களுடைய விமானங்களை, இயக்கங்கள் பற்றி முடிவு செய்து கொள்ள வேண்டும். புயல் கரையை கடக்கும் வரையில், தொடர்ந்து இதைப்போன்ற அவசர ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது பற்றியும் முடிவு எடுக்கப்படும்.

மேலும் இந்த புயல் கரையை கடக்கும் வரையில் விமான நிலையத்தில் உள்ள அனைத்து தரப்பு ஊழியர்களும் விடுப்பு இல்லாமல் பணிக்கு வர வேண்டும் என்றும் அனைத்து துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: புயல் எதிரோலி: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.