ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு வேலை இல்லை - திருமாவளவன் எம்.பி.

author img

By

Published : Oct 2, 2022, 4:52 PM IST

'தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்-க்கு வேலை இல்லை, அவர்கள் பேரணி நடத்த நீதிமன்றம் உத்தரவு தரக்கூடாது' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்க்கு வேலை இல்லை - திருமாவளவன்
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்க்கு வேலை இல்லை - திருமாவளவன்

சென்னை: காமராஜரின் 48ஆவது நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கட்சி நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கே வழி காட்டிய மகத்தான தலைவர், காமராஜர். புதிய புரட்சிகரமான இந்தியாவை ஜனநாயக இந்தியாவை, கட்டமைக்க தம்மை முழுமையாக ஒப்படைத்துக்கொண்ட மாமனிதர் காமராஜர். இவர்களின் நினைவு நாளில், சனாதன அரசியலை தமிழ்நாட்டில் ஒரு நாளும் நுழையவிடமாட்டோம் என விசிக உறுதி ஏற்கிறது.

பயங்கரவாத அணுகுமுறை அரசியலை கொண்ட இயக்கம் தான் ஆர்.எஸ்.எஸ். அது கலாசார இயக்கம் என்ற போர்வையில் இயங்கிக்கொண்டிருக்கிறது. சாகா என்கிற பெயரில் ஆயுதப்பயிற்சி வழங்குகிறார்கள். மக்களுக்கு தொண்டு செய்வதைவிட, வன்முறையைத்தூண்டி வருகிறது. இந்து அல்லாதவர்களை அந்நியர்கள் என்கிற வெறுப்பை விதைக்கிறது. இது மிக ஆபத்தான அரசியல், இந்த ஆபத்தில் இருந்து தமிழ்நாடு பாதுகாப்பாக இருந்தது. ஆனால், இப்போது தமிழ்நாட்டை குறிவைத்துவிட்டனர்.

ஆர்.எஸ்.எஸ் நடத்த இருந்த பேரணி நடத்துவதாக அறிவித்த அன்று ஜனநாயக சக்திகள் மனிதச்சங்கிலி போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தோம். ஆனால், காவல் துறை பொத்தாம்பொதுவாக யாருக்கும் அனுமதி இல்லை எனக்கூறியது. வரும் 11ஆம் தேதி சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி, திட்டமிட்டபடி நடைபெறும் என நம்புகிறோம். இந்த மண் காமராஜர் போன்றவர்களால், பண்படுத்தப்பட்ட மண், இந்த மண்ணில் சனாதன அரசியலுக்கு இடமில்லை என்பதை உணர்த்த இந்த அறப்போர் நடைபெறும். அனைத்து ஜனநாயக சக்திகளும் இதில் பங்கேற்க வேண்டும்.

நேரு ஒரு ஜனநாயக சக்தி. மனிதநேயம் மிக்கவர், அவரே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என நினைத்தால், அது எவ்வளவு ஆபத்தான இயக்கம் எனப்புரிந்து கொள்ளுங்கள். அதேபோல் சர்தார் வல்லபாய் பட்டேல் அவரது வாயால் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் வளர்வது ஆபத்து, அதனால் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும் எனக்கூறி, அந்த இயக்கத்திற்குத் தடை விதித்தார்.

காமராஜர் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரை கொலை செய்ய முயற்சித்தார்கள், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர். காந்தியை சுட்டுக்கொன்ற கும்பல் ஆர்.எஸ்.எஸ், அது தமிழ்நாட்டில் வாலாட்ட பார்க்கிறது என்றால், வாலை சுருட்டிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறோம்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் அப்துல்கலாம் மற்றும் அம்பேத்கர் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது அநாகரிகமான அரசியல். இது மாணவர்கள் நெஞ்சில் விதைக்கப்படும் என்கிற கவலையால் தான் ஆர்.எஸ்.எஸ்ஸை தமிழ்நாட்டில் வர விடக்கூடாது என கூறுகிறோம்.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்-க்கு வேலை இல்லை. அவர்கள் பேரணி நடத்தக்கூடாது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் பேரணி குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கக்கூடாது, சட்டம் ஒழுங்கை தீர்மானிக்கும் ஆற்றல் அரசுக்குத் தான் உள்ளது.

கொள்கை முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் அரசுக்குத் தான் உள்ளது. அரசு விரும்புகிறபடி தான் மற்ற துறைகள் இயங்க வேண்டும். நீதி மறுக்கின்ற இடத்தில் தான் நீதிமன்றம் தன் அதிகாரத்தைச்செலுத்த வேண்டும்.

ஒரு பாசிச பயங்கரவாத வன்முறை இயக்கத்திற்குப் பேரணி நடத்த, அனுமதி தர வேண்டும் இல்லை என்றால், கண்டனம் வரும் என அரசை நீதிமன்றம் எச்சரிப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை" எனக் கூறினார்.

இதையும் படிங்க:ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் சுகாதார சீர்கேடு... அலுவலர்கள் அச்சம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.