ETV Bharat / state

புதிய தலைமைச் செயலக கட்டட வழக்கு: முதலமைச்சர் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு வாதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 10:43 PM IST

New TN Secretary: புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு செய்ததாக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

புதிய தலைமை செயலகம் தொடர்பான வழக்கு
புதிய தலைமை செயலகம் தொடர்பான வழக்கு

சென்னை: கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 2008 முதல் 2010 வரை அண்ணா சாலையில் புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டப்பட்டது. புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு செய்ததாக உயர் நீதிமன்ற நீதிபதி தங்கராஜ் (ஓய்வு) தலைமையில் விசாரணை நடத்த ஆணையத்தை தமிழக அரசு உத்தரவிட்டது.

நீதிபதி (ஓய்வு) தங்கராஜ், அந்த ஆணையத்தில் இருந்து விலகியதை அடுத்து, நீதிபதி (ஓய்வு) ரகுபதி தலைமையில் 2011ஆம் ஆண்டு ஆணையம் அமைக்கப்பட்டது. ரகுபதி ஆணையத்தை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆணையம் திரட்டிய தகவல்களை பரிசீலித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை தேவையா என்பதை அரசு முடிவு செய்ய ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், தமிழக அரசு ஆணையத்தின் ஆவணங்களை பரிசீலிக்காமல் நேரடியாக ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஒப்படைக்க, 2018ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்தும், விசாரணை ஆவணங்களை பரிசீலிக்காமல் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றியதை எதிர்த்தும், மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு தடை விதித்தது. உயர் நீதிமன்ற தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், புதிய விசாரணை தேவை இல்லை என்பதால் கடந்த ஜூலை 13ஆம் தேதி வழக்கை திரும்பப் பெறுவதாக, உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டதால் வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன், அரசியல் காரணங்களுக்காக வழக்கு திரும்பப் பெறப்படுவதால் தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தொடர்ந்த வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: நியோமேக்ஸ் நிதி மோசடி வழக்கு விவகாரம்; விசாரணை அதிகாரிகளை எச்சரித்த நீதிபதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.