ETV Bharat / state

’10 மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு’ - வானிலை ஆய்வு மையம்

author img

By

Published : Apr 14, 2021, 12:48 PM IST

Updated : Apr 14, 2021, 1:19 PM IST

சென்னை: கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னல், காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னல், காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்றைய வானிலை

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று (ஏப்.14) தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்களான புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னல், காற்றுடன்கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

வரும் தினங்கள்

நாளை (ஏப்.15) தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்களான புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தர்மபுரி , கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் (30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில்) கூடிய கன மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறு தினம் (ஏப்.16) தென் தமிழ்நாடு, வட, உள் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

வரும் 17, 18 ஆகிய தேதிகளில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை, பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை வானிலை

வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்)

கோத்தகிரி (நீலகிரி) 11, எடப்பாடி (சேலம்) 8, ஆரணி (திருவண்ணாமலை), சோலையார் (கோவை) பகுதிகளில் தலா 5, வாலிநோக்கம் (ராமநாதபுரம்), கொடநாடு (நீலகிரி) பகுதிகளில் தலா 4, கயத்தாறு (தூத்துக்குடி), மேட்டூர் (சேலம்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), தாத்தையங்கார்பேட்டை (திருச்சிராப்பள்ளி), சின்னக்கல்லார் (கோவை), தொண்டி (ராமநாதபுரம்), குழித்துறை (கன்னியாகுமரி) ஆகிய பகுதிகளில் தலா 3 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இதையும் படிங்க: 'அம்பேத்கரின் போராட்டம் பல தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும்!'

Last Updated :Apr 14, 2021, 1:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.