ETV Bharat / state

மூன்றாவது நாளாக தொடரும் மீட்புப் பணிகள்.. களம் இறங்கிய தனியார் ஸ்கூபா வீரர்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 2:08 PM IST

Chennai flood: சென்னையில் பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தனியார் ஸ்கூபா வீரர்களும் மீட்புப் பணியில் களம் இறங்கியுள்ளனர்.

மீட்புப் பண்யில் களம் இறங்கிய தனியார் ஸ்கூபா வீரர்கள்
மீட்புப் பண்யில் களம் இறங்கிய தனியார் ஸ்கூபா வீரர்கள்

மீட்புப் பண்யில் களம் இறங்கிய தனியார் ஸ்கூபா வீரர்கள்

சென்னை: கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட 'மிக்ஜாம்' (Michaung) புயல், டிசம்பர் 5ஆம் தேதி அன்று ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே கரையைக் கடந்தது. இதனிடையே சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

மேலும் கனமழை நின்றாலும் கூட, இன்னும் ஒரு சில பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. குறிப்பாக வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் பாதிப்புகள் அதிகமாகக் காணப்பட்டன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்படைந்தது.

இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தேசிய மீட்புப் படையினர், மாநில மீட்புப் படையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் சில தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் என பலர் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், மீட்கப்பட்ட மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி: தொடர்ந்து 3வது நாளாக வேளச்சேரியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், படகுகள் மூலம் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். குடிநீர், பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் சிக்கியுள்ள மக்களுக்கு அரசுத் தரப்பிலும், தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பாகவும் நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவு வழங்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், அப்பகுதிகளில் மின்சாரம், தொலைத்தொடர்பு சேவைகள் இன்னும் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

களத்தில் தனியார் ஸ்கூபா வீரர்கள்: இந்நிலையில் சோழிங்கநல்லூர், காரப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஸ்கூபா வீரர்கள், அவர்களின் படகுகள் மூலம் வெள்ள நீர் சூழ்ந்த பகுதியில் சிக்கி இருந்த பொதுமக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து ஸ்கூபா வீரர் அரவிந்த் கூறுகையில், “கடந்த 4 நாட்களாக நாங்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை நாங்கள் 500க்கும் மேற்பட்டவர்களை மீட்டு உள்ளோம். குறிப்பாக குளோபல் மருத்துவமனை பகுதி, பெரும்பாக்கம், காரப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாதை குறுகி இருப்பதால், இந்த படகில் எளிதாகச் சென்று மீட்க முடிகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ராஜாங்குப்பம் பகுதியில் வெள்ள நீரில் போராடும் வட மாநிலத் தொழிலாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.