ETV Bharat / state

தனியார் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்குக

author img

By

Published : May 8, 2020, 4:52 PM IST

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு அறைகளை சுத்தம் செய்வதற்காக தனியார் பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.ஆர். நந்தகுமார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

private school organization demand to government for reopen schools
private school organization demand to government for reopen schools

இதுதொடர்பாக அவர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில், கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐம்பது நாட்களாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கிற நேரத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறந்து, ஐ.டி நிறுவனங்களில், கோயில்களில் 33 சதவீதம் பேர் வேலை செய்யலாம் என்றும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 விழுக்காட்டிற்கும் குறையாமல் வேலை செய்வதற்கு அனுமதி அளித்துள்ளீர்கள் . பல்வேறு வணிக நிறுவனங்களைத் திறந்து வியாபாரம் செய்திடவும், முக்கியமான பணிகள் நடைபெறவும் போக்குவரத்தை சீர் செய்து மக்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தியுள்ளீர்கள்.

இந்நிலையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் செயல்படவில்லை. அதுமட்டுமின்றி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறாமலும், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முழு ஆண்டுத் தேர்வு நடைபெறாததாலும், மூன்றாம் பருவ கல்வி கட்டணத்தை வசூலிக்காததாலும் ஆசிரியர்களுக்கு ஊதியம் அளிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது. கர்நாடகத்தில் தனியார் பள்ளிகள் பழைய பள்ளி கல்வி கட்டண பாக்கியை வசூலித்துக் கொள்ள அந்த அரசு அனுமதி தந்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்றமும் கல்வி கட்டணம் கட்டுவது பெற்றோர்களின் கடமை, அதை வசூலித்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகளை கல்வி கட்டணம் கட்ட அனுமதியுங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அரசு கல்வி கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதி தரவேண்டும் எனக் கூறியுள்ளார்.

எனவே பள்ளி அலுவலத்தை மட்டும் திறந்து பழைய பள்ளி கல்விக் கட்டணத்தை மட்டும் வசூல் செய்துகொள்ளவும், சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாத்து வகுப்பறைகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளவும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் அறைகளை சுத்தம் செய்திடவும், தேர்வுத் தாள்களை மதிப்பீடு செய்வதற்கான வகுப்பறைகளை தயார் செய்திடவும் அரசு பள்ளி கல்வித் துறைக்கு உத்தரவிட்டு தனியார் பள்ளிகள் திறந்து தகுந்த இடைவெளியோடு ஓரிருவர் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.