ETV Bharat / state

பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் இல்லத்தில் போலீசார் சோதனை!

author img

By

Published : Nov 15, 2022, 7:54 PM IST

பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்ட விவகாரத்தில், சென்னையில் போலீசார் நடத்திய சோதனையில் செல்போன்கள், 10 லட்சம் பணம், லேப்டாப், டைரி உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவியதாக கூறப்படுபவர்கள் இல்லத்தில் காவல்துறை சோதனை...!
பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவியதாக கூறப்படுபவர்கள் இல்லத்தில் காவல்துறை சோதனை...!

சென்னை: கோவை கார் வெடிப்பு வழக்குத்தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை(NIA) அமைப்பு விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, இந்த வழக்குத்தொடர்பாக கடந்த 10ஆம் தேதி சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 43 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு போலி பாஸ்போர்ட், சிம் கார்டு, பணப்பரிவர்த்தனை ஆகியவை வழங்கி ஆதரவாக செயல்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் பட்டியல் ஒன்றை தயார் செய்து தமிழ்நாடு காவல் துறைக்கு அனுப்பியுள்ளது.

அதில் சென்னையில் 18 நபர்கள் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கடந்த 10ஆம் தேதி தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு, ஆதரவாக செயல்பட்டதாக பட்டியலில் உள்ள 4 பேரின் வீடுகளில் சென்னை காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், இன்று(நவ.15) மீண்டும் சென்னை காவல் துறையினர் கொடுங்கையூரைச் சேர்ந்த முகமது தப்ரஸ், ஏழு கிணறு பகுதியைச்சேர்ந்த தவ்பிக் அகமது, மண்ணடியைச் சேர்ந்த ஹாரூன் ரஷித், வடக்கு கடற்கரை பகுதியைச்சேர்ந்த முகமது முஸ்தபா ஆகியோருக்குச்சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இந்தச்சோதனையில் முகமது தப்ரஸ் வீட்டில் வங்கிக்கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட், செல்போன்கள், லேப்டாப், ஹார் டிஸ்க், டைரிகள் உள்ளிட்ட 38 பொருட்கள் மற்றும் ஆவணங்களைக்கைப்பற்றி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல மண்ணடியைச் சேர்ந்த ஹாரூன் ரஷித் 10 செல்போன்கள் மற்றும் மடிக்கணினி உள்ளிட்டப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதே போல அனைவரின் வீட்டிலும் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சோதனையில் தொடர்புடைய நபர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், அவர் யாருடன் தொடர்பில் உள்ளார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: சமூக வலைத்தளவாசிகள் உஷார்.. அவதூறு போஸ்டுகளை விசாரிக்க தனிப்பிரிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.