ETV Bharat / state

கோனிகா கலர் லேப் ஓனர் வீட்டில் கொள்ளை.. போக்குகாட்டிய பலே திருடன் சிக்கியது எப்படி?

author img

By

Published : Mar 14, 2023, 1:12 PM IST

கோனிகா கலர் லேப்பின் உரிமையாளர் வீட்டில் 66 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள், 80 கிலோ வெள்ளி மற்றும் 13.5லட்சம் பணம் கொள்ளையடித்து விட்டு விபிஎன் ஆப் பயன்படுத்தி போலீசாரிடம் சிக்காமல் சுற்றிய கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.

police arrested the robber in the case of robbery at Konica Color Lab owner house
கோனிகா கலர் லேப் உரிமையாளர் வீட்டில் கொள்ளை

சென்னை: சாலிகிராமம், குமரன் காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்( 65). இவர் சென்னை உட்பட இந்தியா முழுவதும் இயங்கி வரும் பிரபல போட்டோ நிறுவனமான கோனிகா கலர் லேபின் உரிமையாளர் ஆவார். இவரது மனைவி அருணா தேவி. சந்தோஷ்குமார் தனது குடும்பத்துடன் கடந்த 20 வருடங்களாக இந்த வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி தனது மனைவி அருணா தேவியுடன் சந்தோஷ் குமார் சொந்த ஊரான ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டு, 28ஆம் தேதி தனது குடும்பத்துடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோ மற்றும் லாக்கரில் இருந்த 66 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள், 80 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 13.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அதிர்ச்சியில் உறைந்த சந்தோஷ்குமார் இந்த கொள்ளை சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மூன்று தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். கொள்ளையர்கள் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்களின் வயர்களை அறுத்துவிட்டு கேமரா பதிவுகளை சேமித்து வைக்கும் டிவிஆர் கருவிகளையும் எடுத்து சென்றதால் போலீசாருக்கு கொள்ளையர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் போலீசார் அருகில் பிற இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளைக் கைப்பற்றி கொள்ளையர்களின் அடையாளங்களை ஆய்வு செய்து வந்தனர்.

இந்நிலையில் ஜே.ஜே நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலாஜி ராம்குமார் என்பவரின் வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 23 சவரன் நகை மற்றும் 2 ஆயிரம் பணம் கொள்ளை போன வழக்கில் போலீசார் கொள்ளையனை திருநெல்வேலியில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருநெல்வேலி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த முத்து என்பது தெரியவந்தது.

மேலும், இவர் மீது 4க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் இவரிடம் நடத்திய விசாரணையில், இவர் விருகம்பாக்கம் பகுதியில் கோனிகா கலர் லேப் உரிமையாளர் சந்தோஷ்குமார் என்பவரின் வீட்டில் 66 லட்சம் தங்க வைர நகைகள், 80 கிலோ வெள்ளி, 13.5 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்ததாக அதிர்ச்சிகரமான வாக்குமூலத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் கொள்ளையன் முத்துவிடம் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில், அம்பத்தூர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வரும் முத்து, இரவு 7 மணியளவில் ஆள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆள் இல்லாத வீட்டை கவ்பார் மூலமாக கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை முத்து கொள்ளையடித்தும் வந்துள்ளார்.

குறிப்பாக கொள்ளையடிப்பதற்கு முன்பும், பின்பும் போலீசார் நெருங்காத படி விபிஎன் ஆப்பை பயன்படுத்தி முத்து போன் பேசி வருவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கொள்ளையடித்த நகைகளை திருமங்கலம் பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக கொள்ளையன் முத்து கொடுத்த தகவலின் அடிப்படையில், 30 சவரன் நகைகள் உள்ளிட்ட 65% பொருட்களை மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க பயன்படுத்திய 8 செல்போன்களை கொள்ளையன் முத்துவிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவருக்கு உதவியாக வேறு யாரேனும் உள்ளார்களா அல்லது தனி ஒருவரா என முத்துவிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மீதமுள்ள நகைகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜெயில் பறவைகள் வெளியே வந்து திருட்டு.. வேலூர் நகை கொள்ளை வழக்கில் பரபரப்பு தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.