ETV Bharat / state

பிரபலங்கள் வீட்டில் கைவரிசை காட்டும் பணியாளர்கள்; போலீசார் பரிந்துரை என்ன..?

author img

By

Published : Apr 13, 2023, 1:49 PM IST

சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் வீட்டில் பணிபுரியும் பெரும்பாலான வடமாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்கள், வீட்டில் உள்ள நகை, பணம், விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை திருடி தலைமறைவாகும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற திருட்டு சம்பவங்களை தடுப்பதற்கு போலீசாரின் பரிந்துரை என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

police action on Serial burglaries in film celebrities and businessman houses
சினிமா பிரபலங்கள் தொழிலதிபர்கள் வீட்டில் தொடர் திருட்டு

சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வீடு வாங்குவது என்பது அனைவரதும் கனவு, அதில் திரைபிரபலங்களுக்கும் விதிவிலக்கல்ல. குறிப்பாக திரைப்பிரபலங்கள் அடிக்கடி ஷூட்டிங் மற்றும் நிகழ்ச்சிகளுக்காக பிற மாநிலத்திற்கு செல்ல வேண்டியிருப்பதால் அவர்களின் வீடுகளை முழுவதுமாக கண்காணிக்க ஊழியர்களை நியமிக்கின்றனர். அதிலும் பெரும்பாலான பிரபலங்கள் வடமாநிலத்தவரையே பணி அமர்த்துகின்றனர்.

இப்படி திரைப்பிரபலங்களின் வீடுகளில் கைவரிசைபணியாற்றும் ஊழியர்கள் அவர்களது வீடுகளில் பணம் மற்றும் தங்க நகைகளை கைவரிசை காட்டிவிட்டு தலைமறைவாகும் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. அந்த வகையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 5 திரைப்பிரபலங்களின் வீடுகளில் ஊழியர்கள் நகை,பணம் கைவரிசை காட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

டார்லிங், மரகத நாணயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிக்கி கல்ராணி. ராயப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி இவரது வீட்டில் வேலைபார்த்த தனுஷ் என்பவர் விலையுயர்ந்த கேமரா மற்றும் 40 ஆயிரம் பணம் திருடிவிட்டு தப்பிச்சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. திருப்பூரில் பதுங்கி இருந்த தனுஷை போலீசார் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து என்னை அறிந்தால், நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் பார்வதி நாயர். நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வந்த பார்வதி நாயரின் வீட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி 9 லட்சம் மதிப்புள்ள வாட்ச் மற்றும் 3.5 லட்சம் மதிப்புள்ள ஐபோன், லேப்டாப் ஆகியவை திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி பார்வதி நாயரின் வீட்டில் வேலை பார்த்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவரை கைது செய்தனர்.

அடுத்தபடியாக எல்லாம் அவன் செயல், அவன் இவன், ஜில்லா உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் ஆர்.கே (எ) ராதாகிருஷ்ணா. தொழிலதிபரான இவர் நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி பகுதியில் அமைந்துள்ள வீட்டில் கடந்த வருடம் நவம்பர் 11ஆம் தேதி இவரது மனைவி ராஜியை கட்டிப்போட்டு கத்திமுனையில் 250 சவரன் தங்க நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. விசாரணையில் ஆர்.கே வீட்டில் பணியாற்றிய காவலாளியான நேபாளி ரமேஷ், அவரது கூட்டாளியுடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து 8 பேர் கைது செய்யப்பட்டு 120 சவரன் நகை மீட்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக போயஸ் கார்டன் ராகவீரா அவென்யூவில் வசித்து வரும் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் லாக்கரில் இருந்து தங்க மற்றும் வைர நகைகள் கணக்கில்லாமல் திருடுபோனது. இந்த வழக்கு விசாரணையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணியாற்றிய ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுனர் வெங்கடேசன் ஆகியோர் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து இருவரையும் தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து 200 சவரன் தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள், 1 கோடி நில பத்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து ‘நீ பார்த்த விழிகள்’ , ‘மலரே நின்னே’ உள்ளிட்ட பிரபலமான பாடல்களை பாடியவர் விஜய் யேசுதாஸ். இவரது வீடு அபிராமபுரம் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி அவரது வீட்டு லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் நகைகள் காணாமல் போயுள்ளது. பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாக விஜய் யேசுதாஸின் மனைவி தர்ஷனா அபிராமபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பணியாளர்களை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக திரை பிரபலங்களின் வீடுகளில் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்களே கைவரிசை காட்டி உள்ளனர். குறிப்பாக சென்னையில் கடந்தாண்டு மே மாதம் முதல் கடந்தாண்டு நவம்பர் மாதம் வரை மட்டும் பிற மாநிலத்தை சேர்ந்த 427 நபர்களும், வெளிநாட்டை சேர்ந்த 96 நபர்களும் குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக புள்ளிவிவரங்களை காவல்துறை தெரிவித்துள்ளது.

இது போன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறை சார்பில் எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் என காவல்துறை உயரதிகாரியிடம் கேட்டப்போது, “பணிக்கு சேரும் போது தொழிலாளர்களின் ஆதார்கார்டு, கைரேகை பதிவுகளை முறையாக ஆய்வு செய்து காண்ட்ரக்டர் மற்றும் வீட்டின் உரிமையாளர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என கூறினார்.

மேலும், சாலையோரங்களில் பெட்ஷிட், பொம்மை, எலட்ரானிக் பொருட்கள் போன்ற பொருட்கள் விற்பனை செய்யும் தொழில்களில் ஈடுபடும் நபர்களுக்கு பிற குற்ற நடவடிக்கையில் தொடர்பு உள்ளதா என தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து மோசடி.. பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் மீது புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.