ETV Bharat / state

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு ரத்து - முதலமைச்சரை சந்தித்த பாமக தலைவர் ஜி.கே.மணி!

author img

By

Published : Nov 3, 2021, 2:50 PM IST

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை, பாமக தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்தார்.

ஜி.கே.மணி
ஜி.கே.மணி

சென்னை: கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 விழுக்காடு ஒதுக்கீட்டில், 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த ஆட்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி 25க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.

இந்தநிலையில் நவ.1 ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டவிரோதமானது எனக்கூறி, தமிழ்நாடு அரசு பிறப்பித்த இட ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதுதொடர்பாக இன்று (நவ.3) சென்னை தலைமை செயலகத்தில் பாமக தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், " 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது ஒட்டுமொத்த வன்னிய மக்களுக்கும், மருத்துவர் ராமதாசுக்கும் பேரிடியாக கருதுகிறோம்.

இந்த இட ஒதுக்கீட்டை வழங்குவது தமிழ்நாட்டினுடைய உரிமை. இதை நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. இதில் மேல்முறையீடு செல்ல வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம்.

இட ஒதுக்கீடு மூலமாக கல்வி, வேலைவாய்ப்புகளில் பயனடைந்தவர்களுக்கு இந்த தீர்ப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே முதலமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று முதலமைச்சர் உறுதியளித்தார்.

மேலும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பாமக உறுதியாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வன்னியர் இட ஒதுக்கீடு: சட்டமும் ரத்து, ஒதுக்கீடும் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.