ETV Bharat / state

சென்னையில் 8 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை - பிரதமரின் தமிழக பயணம் தடைபடுமா?

author img

By

Published : Apr 7, 2023, 7:18 AM IST

பிரதமர் மோடி தமிழகம் வர உள்ள வேளையில் சென்னையில் எட்டு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: கேரளா மாநிலம் விழிஞ்சம் கடலோர எல்லைப் பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறிய ரக படகு ஒன்றை கடலோர காவல் படையினர் மடக்கி பிடித்தனர். அதில் 300 கிலோ ஹெராயின் மற்றும் ஏகே 47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அரசால் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்திற்காக நிதி திரட்டும் முயற்சியில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்பட்டு இருக்கலாம் என்கிற அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் கேரள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கியமாக சென்னை, திருவள்ளூர், கேரளா உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட சோதனைகளில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வளசரவாக்கம் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்த சபேசன் என்பவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக விழிஞ்சம் பகுதியில் ஆயுதம் மற்றும் போதை பொருள் கடத்தல் வழக்கில் இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபர் மாதம் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை நடத்த ஏழு இடங்களில் சோதனை நடைபெற்றது. அதில் விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான ஆவணங்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிரடி சோதனையாக திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் முகாமில் ஆய்வு மேற்கொண்டு 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களிடம் இருந்தும் 53 செல்போன் மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் சிறையில் கைது செய்யப்பட்டவர்களின் வங்கி பரிவர்த்தனைகளை விசாரணை நடத்தியதின் அடிப்படையில், மீண்டும் சென்னை, ஆவடி உட்பட எட்டு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக போதைப் பொருள் மற்றும் ஆயுதம் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை ஹவாலா பணமாக மாற்றி பல்வேறு நபர்களுக்கு சிறிய தொகையாக வங்கி கணக்குகளில் செலுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில் சென்னையில் எந்தெந்த இடங்களில் இது போன்று பணப் பரிமாற்றம் நடைபெறுகிறது என்பது குறித்து வங்கி கணக்குகள் மூலம் ஆய்வு செய்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதன் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக போரூர் பகுதியை சேர்ந்த ஐயப்பன், குன்றத்தூர் பகுதியை சேர்ந்த ஃப்ளோரன்ஸ்சா, கோவூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார், பம்மல் பகுதியை சேர்ந்த ஏசுதாஸ், வேளச்சேரியை சேர்ந்த நீசா பாத்திமா என்பவர் ஈவ்னிங் பஜார் பகுதியில் வைத்துள்ள எலக்ட்ரானிக் கடை மற்றும் மண்ணடியில் மூன்று லாட்ஜ்கள் ஆகிய எட்டு இடங்களில் கேரளா என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் 70 லட்ச ரூபாய் ரொக்க பணம் மற்றும் 300 கிராம் தங்க நகைகள், 1,000 சிங்கப்பூர் டாலர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வீட்டில் 10 கிலோ கஞ்சா வைத்திருந்த ஐயப்பன் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். பர்மா பஜாரில் வேலை பார்த்து வந்த முகமது இலியாஸ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மண்ணடி பகுதியில் இருக்கக் கூடிய மூன்று தனியார் விடுதிகளில் 12 லட்ச ரூபாய் கணக்கில் காட்டப்படாத ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இலங்கையில் இருந்து குருவியாக சென்னைக்கு வந்து ஹவாலா பணத்தை பரிமாற்றம் செய்து விட்டு செல்வதற்கு ஏதுவாக மண்ணடி பகுதியில் இயங்கி வரும் சில தனியார் லாட்ஜ்கள் உதவுவதாக அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் சென்னையில் அவ்வப்போது வங்கி கணக்குகளில் பணம் செலுத்தும் போது சில நபர்களை பின் தொடர்ந்து அவர்களை தாக்கி பணத்தை கொள்ளையடிப்பது அவ்வப்போது நடைப்பெற்றதாக கூறப்பட்டு உள்ளது. பிடிபட்டவர்கள் யார் வங்கிக் கணக்குகளுக்கு இந்த பணத்தை செலுத்துகிறார்கள் என்பது குறித்த விவரங்களும் முழுமையாக கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிடிபட்டவர்கள் சிறிய அளவிலான தொகைகளை ஹவாலா பணமாக மாற்றி அதில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் விழிஞ்சம் கடற்பகுதியில் பிடிபட்ட போதை மற்றும் ஆயுத பொருட்கள் கடத்தல் வழக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்ட சோதனைகள் என்.ஐ.ஏ அதிகாரிகள் மேற்கொண்டு 20க்கும் மேற்பட்ட நபர்களை இதுவரை கைது செய்துள்ளனர்.

அதன் அடுத்த கட்டமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 8 இடங்களில் நடைபெற்ற சோதனையில் சுமார் 81 லட்சம் வரையில் ரொக்க பணமும், 300 கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி சென்னைக்கு வர உள்ள நிலையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட பகுதியாக மூவரசம்பட்டு குளம் அறிவிப்பு - கோயிலில் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.