ETV Bharat / state

பேனா சிலை விவகாரம்: மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி

author img

By

Published : Feb 21, 2023, 10:30 PM IST

சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படுவது தொடர்பாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆட்சியரை சந்தித்து மீண்டும் தனது கருத்தை முன்வைக்க உள்ளதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

பேனா சிலை விவகாரம்
பேனா சிலை விவகாரம்

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் பேனா வடிவிலான நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.81 கோடியில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணையம், சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம், சென்னை துறைமுக அறக்கட்டளை, இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றிடம் அனுமதி, ஆட்சேபனை இல்லாச் சான்றிதழைப் (NOC) பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக கடந்த மாதம் 31ம் தேதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, திமுக, பாஜகவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேனா நினைவு சின்னத்தை நிறுவினால் அதை உடைப்பேன் என சீமான் கூறியதால், திமுகவினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் கருத்துக் கேட்பு கூட்டம் தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கூட்டத்தில் பங்கேற்ற 34 பேரில் 22 பேர் திட்டத்தை வரவேற்றுள்ளனர். 12 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்" என கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் பேனா சின்னத்துக்கு எதிராக திருமுருகன் காந்தி கருத்தை பதிவு செய்த நிலையில், அவர் ஆதரவாக பேசியதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"கடல்நீர் மட்டம் உயர்வை தடுக்க புவி வெப்பமயமாதலை குறைத்தால் மட்டுமே சாத்தியமாகும். இதுதொடர்பாக தமிழ்நாடு மட்டும் நடவடிக்கை எடுப்பது பலனளிக்காது. தமிழ்நாட்டின் வரலாற்று நிகழ்வுகளை அனைத்து பொதுமக்கள் அறியும் வகையிலும், கடல் நீர்மட்டம் உயர்வு உள்ளிட்ட கடல்சார் சுற்றுச்சூழல் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டும் இப்பேனா நினைவுச்சின்னத் திட்டம் நிறுவப்பட வேண்டுமென விரும்புகிறேன்" என திருமுருகன் காந்தி பேசியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரிடம் ஈ டிவி பாரத் தரப்பில் தொடர்பு கொண்டு கேட்ட போது, "மாவட்ட அதிகாரிகள் செய்தது சரியல்ல. சென்னை ஆட்சியரை நேரில் சந்தித்து மீண்டும் என் கருத்தை முன்வைப்பேன். கடல் மட்டம் உயர்வு, சுற்றுச்சூழல் பிரச்னைகளை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை எதிர்க்கிறேன்". என்றார்.

தென்னிந்திய மீனவர் நலச்சங்கத்தின் தலைவர் கே.பாரதி கூறுகையில், "கருத்து கேட்பு நடந்த முறையே தவறு. ஒரு மிகப்பெரிய அரங்கில் 34 நபர்கள் தான் பேச வாய்ப்பளிக்க முடியுமா? அனைத்து பிரதிநிதிகளும் பேச அனுமதி அளித்திருக்க வேண்டும்." என கூறினார்.

எனினும் இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஜெயமுருகன் ஆகியோரை ஈ டிவி பாரத் தொடர்பு கொண்ட போது, உரிய பதில் அளிக்கவில்லை.

இதையும் படிங்க: நான் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகவில்லை.. 15 நிமிடம் போராடி தப்பித்தேன்.. எல்லாம் தப்பா பேசுராங்க.. கொடுமையை விளக்கும் பெண்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.