ETV Bharat / state

அரசியலில் இருந்து விலகலா..? பழனிவேல் தியாகராஜன் அளித்த புதுவிளக்கத்தின் பின்னணி

author img

By

Published : Jan 2, 2023, 10:36 PM IST

அரசியல் பயணம் குறித்து தான் எழுதும் புத்தகம் அரசியலில் இருந்து வெளியேறிய பின் வெளியாகும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிவிட்ட ட்விட்டர் பதிவு சலசலப்பை கிளப்பிய நிலையில் தற்போது அவர் அந்தப் பதிவிற்கு விளக்கமளித்துள்ளார்.

அரசியலில் இருந்து விலகலா..? பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
அரசியலில் இருந்து விலகலா..? பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

சென்னை: நிதி மற்றும் மனிதவளத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தான் புத்தகம் எழுதத் தொடங்கியுள்ளதாகவும், அரசியலில் இருந்து வெளியேறிய பிறகு, அந்தப் புத்தகத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறி உள்ளது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அமைச்சரவையில் மிக முக்கிய பொறுப்பான நிதித் துறையை யாருக்கு வழங்குவது என விவாதம் எழுந்த பொழுது, அதற்கு தகுந்த நபராக பழனிவேல் தியாகராஜன் திகழ்ந்தார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஆரம்பம் முதலே வெள்ளை அறிக்கை, வேளாண் துறைக்கு தனி பட்ஜெட், தமிழக நிதிச் சுமையை எவ்வாறு குறைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இது ஒரு புறம் இருக்க பழைய ஓய்வுதிட்டத்தை அமல்படுத்த முடியாது என பொதுவெளியில் இவர் தெரிவித்த கருத்து, அரசு ஊழியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக திமுகவினரே பழனிவேல் தியாகராஜன் மீது அதிருப்தி தெரிவித்தனர்.

காயிதமில்லா பட்ஜெட் என்ற இ-பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, நிதியை மிச்சப்படுத்தினார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்ற செயல்பாடுகளை வேகப்படுத்தினார். குறிப்பாக மத்திய அரசிடம் இருந்து நிதிகளை கேட்டுப் பெறுவதில் வல்லவராக திகழ்ந்தார். சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த பழனிவேல் தியாகராஜன் மீது "தங்கள் துறைக்கு அதிக நிதி வழங்க மறுக்கிறார்" என மூத்த அமைச்சர்கள் குற்றச்சாட்டை வைத்திருந்தனர். குறிப்பாக அமைச்சர்கள் ஏ.வ.வேலு, ஐ.பெரியசாமி ஆகியோர் அதிக நிதி கேட்ட விவகாரம் பொதுவெளியில் வெடித்தது.

இது ஒரு புறம் இருக்க, திமுக எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக பழனிவேல் தியாகராஜன் சிறப்பாக செயல்பட்டார் எனக் கூறப்பட்டது. பழனிவேல் தியாகராஜனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்ட காரணத்தால், ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதன் காரணமாக பழனிவேல் தியாகராஜன், அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இப்படி ஆட்சி நிர்வாகத்திலும், உட்கட்சி விவகாரங்களிலும் பழனிவேல் தியாகராஜன் சில சமரசங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது பாஜகவினர் காலணியை எரிந்தனர். இந்த நிகழ்வை திமுகவினர் கடுமையாக கண்டிக்காததால் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மனரீதியாக பாதிக்கப்பட்டார் என பேசப்பட்டது.
இதனையும் பொருட்படுத்தாமல் தமிழகத்தின் நிதிச் சுமையை சரி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். குறிப்பாக திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக நிதியை சிக்கனமாக கையாண்டார்.

இந்த நிலையில், அரசியலில் அவர் கடந்து வந்த பாதை குறித்தும், கடக்க போகும் பாதை குறித்தும் பழனிவேல் தியாகராஜன் புத்தகம் எழுத உள்ளார். இது குறித்து புத்தாண்டில் அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "2023ஆம் ஆண்டு மகிழ்ச்சியாக அமைய எனது வாழ்த்துகள். தவிர்க்க முடியாத மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் நேரம் இது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட முன்னேற்றங்களின் மதிப்பையும், புதிய நம்பிக்கைகளுக்கான உறுதி மொழியையும் ஏற்கும் நேரம் இது. நான் எதிர்கொண்ட மற்றும் எதிர்கொண்டு வரும் மாற்றங்கள் குறித்த புத்தகத்தை எழுதத் தொடங்கியுள்ளேன். எனது அரசிலிருந்து வெளியேறிய பிறகு அந்த புத்தகத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவர் பதிவிட்ட உடனே இந்த செய்தி அரசியல் வட்டாரங்களில் பற்றி எரியத்துவங்கியது. திமுகவினரின் செயலால் பழனிவேல் தியாகராஜன் விரக்தி அடைந்திருக்கிறார் என அவரது அபிமானிகள் கருத்து தெரிவித்தனர். பழனிவேல் தியாகராஜனின் ட்விட்டர் பதிவு பரபரப்பான நிலையில் அது குறித்து அவர் தற்போது விளக்கமளித்திருக்கிறார்.

  • Apologies for the concern caused to some by my unintentional sequence of words😀

    I meant the book's contents will be so candid that I simply CANNOT release it till I am no longer a Minister... WHATEVER year that may be

    (And EVERY Minister WILL Remit office Some Day after all) https://t.co/cDcFmwipL2

    — Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) January 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

“தற்செயலாக என் வார்த்தைகளின் வரிசையால் சிலருக்கு ஏற்பட்ட கவலைக்கு மன்னிக்கவும். புத்தகத்தின் உள்ளடக்கங்கள் மிகவும் நேர்மையாக இருக்கும், இனி நான் அமைச்சராக இருக்கும் வரை அதை வெளியிட முடியாது... என்பதால் அவ்வாறு தெரிவித்தேன். ஒவ்வொரு அமைச்சரும் ஒரு நாள் அலுவலகத்தை விட்டு வெளியேறி தான் ஆக வேண்டும்” என்று ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆட்சியில் இருந்து வெளியேறுகிறாரா பிடிஆர்? பரபரப்பினை ஏற்படுத்திய ட்விட்டர் பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.