ETV Bharat / state

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகம் வழங்க உத்தரவு

author img

By

Published : Jun 16, 2020, 10:24 PM IST

Updated : Jun 16, 2020, 10:49 PM IST

சென்னை: அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை வருகின்ற 22ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

chennai
chennai

தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் விலையில்லா புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த பாடப்புத்தகங்கள் மே மாதம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு ஜூன் மாதம் பள்ளி திறக்கும் போது மாணவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு கரோனா தொற்று பரவலால் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாடப் புத்தகம் பாடநூல் கழகத்திடம் உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை பள்ளிகளை திறப்பதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க தனியார் வாகனங்கள் மூலம் நேரடியாக கொண்டு சென்று பள்ளிகளில் அளிக்க வேண்டுமென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாடப்புத்தகங்கள் கொண்டு செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,

"2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கும் அரசால் வழங்கப்படும் விலையில்லா பாடநூல்கள் பள்ளி தொடங்குவதற்கு முன்னர் நேரடியாக அந்தந்த பள்ளிகளிலேயே வழங்க வேண்டும். தமிழ்நாடு பாடநூல் கழக விநியோக மையங்களிலிருந்து தேவையான எண்ணிக்கையில் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலக வினியோக மையங்களுக்கு ஜூன் 18ஆம் தேதிக்குள் வழங்கப்பட்டு விடும்.

இதனை மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜூன் 22ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் அந்தந்த பள்ளிகளில் நேரடியாக தனியார் வாகனம் மூலம் தனியார் வேலையாட்களை வைத்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஜூலை மாதம் முதல் வாரத்தில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புத்தகங்கள் பெறப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்த்து குறைவாக இருந்தால் மாவட்ட கல்வி அலுவலரிடம் தெரிவித்து தேவையான புத்தகங்களை பெற்றுக்கொள்ளவும். பாடப்புத்தகங்களை எடுத்துச் செல்லும் பணியாளர்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து பணி புரிவதை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

ஜூலை 1ஆம் தேதிக்கு முன்னர் மாணவர்களுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் நோட்டு புத்தகம் மற்றும் இதர விலையில்லா பொருள்கள் பள்ளிகளுக்கு சென்றடையும் விபரத்தினையும் தெரியப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பொடி நடையாக கோவைக்குள் நுழையும் தொழிலாளர்களால் கரோனா பரவுகிறதா?

Last Updated : Jun 16, 2020, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.