ETV Bharat / state

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு.. துள்ளாத தலைவன்.. எடப்பாடியை வெளுத்து வாங்கிய வைத்திலிங்கம்!

author img

By

Published : May 12, 2023, 1:20 PM IST

ஓபிஎஸ் - சபரீசன் சந்திப்பு, ஓபிஎஸ் - டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து ஈபிஎஸ் விமர்சனம் செய்ததற்கு ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் அறிக்கை மூலம் பதில் அளித்துள்ளார்.

பழமொழிகளால் ஈபிஎஸ்சை விளாசிய வைத்திலிங்கம்
பழமொழிகளால் ஈபிஎஸ்சை விளாசிய வைத்திலிங்கம்

சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாய மானும், மண் குதிரையும் சந்தித்தது போல்தான் ஓபிஎஸ்சும், டிடிவி தினகரனும் சந்தித்தது என்றும், பூஜ்ஜியமும், பூஜ்ஜியமும் இணைந்தால் பூஜ்ஜியம்தான் எனவும் விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தான் யார் யார் காலைப் பிடித்து ஊர்ந்து முதலமைச்சராக ஆனார் என்பதையும், யாரிடம் கெஞ்சி கூத்தாடி, தூதுவிட்டு முதலமைச்சராக நான்கு ஆண்டு காலம் நீடித்தார் என்பதையும் மறந்து, இல்லை மறைத்து ஓ.பன்னீர்செல்வத்தையும், டிடிவி தினகரனையும் சந்தித்ததை மாய மானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது என்று துரோகி விமர்சித்துள்ளது ‘நன்றி கெட்ட மனிதனை விட நாய்கள் மேலடா’ என்பதற்கேற்ப அமைந்துள்ளது.

திருச்சி மாநாடு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய நிலையில், இருவரின் சந்திப்பானது காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்ததைப் போன்று உள்ளது என்று துரோகி சொல்வது கேலிக்கூத்தாக இருக்கிறது. ‘ஆமை புகுந்த வீடும், அமீனா நுழைந்த வீடும் உருப்படாது’ என்ற பழமொழிக்கேற்ப, துரோகியின் நுழைவால் அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிற அதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை, தொண்டர்கள் இயக்கமாக மாற்றுவதற்கான சந்திப்புதான் இருவரின் சந்திப்பு.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் சந்திப்பின்போது சிலர் இடம் பெறாதது குறித்து பதில் அளிக்க இயலாத எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் - டிடிவி தினகரன் சந்திப்பின்போது வைத்திலிங்கம் எங்கே, ஜேசிடி பிரபாகர் எங்கே, மனோஜ் பாண்டியன் எங்கே என்று வினவி இருக்கிறார்.

இந்த சந்திப்பே ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் மற்றும் நான் (வைத்திலிங்கம்) ஆகியோர் ஒன்று கூடி முடிவு எடுத்த பிறகுதான் நடைபெற்றது. மற்றவர்களை பற்றி பேசும் முன், தன் முதுகில் உள்ள ஓட்டையை எடப்பாடி பழனிசாமி பார்க்க வேண்டும்.

சபரீசனை, ஓபிஎஸ் சந்தித்ததன் காரணமாக, ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் 'பி' டீம் என்று துரோகி கூறியுள்ளது, ‘சாத்தான் வேதம் ஒதுவது’ போல் உள்ளது. கிரிக்கெட் விளையாட்டினை தன்னுடைய பேரப் பிள்ளைகளுடன் காணுகின்றபோது, சபரீசன் சந்திப்பு நிகழ்ந்தது. சபரீசன் சந்திப்பு என்பது பல ஆயிரம் பேர்களுக்கு மத்தியில் நிகழ்ந்த ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு.

இது குறித்து துரோகி கேள்வி கேட்பது, நாகரிகம் மற்றும் பண்பாடு தெரியாதவர் என்பதை படம் போட்டுக் காண்பிக்கிறது. உண்மையில் திமுகவின் 'பி' டீமாக செயல்படுவது துரோகிதான் என்பதை ஒரு சில உதாரணங்களுடன் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஒரு தலைவர் காலமானால், அதற்கான இரங்கல் தீர்மானம் என்பது பேரவைத் தலைவரால் கொண்டு வரப்படுவது என்பது மரபு. இந்த மரபை முற்றிலும் மீறி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவுற்றது குறித்த இரங்கல் தீர்மானத்தை பேரவை முன்னவர் மூலம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முன்மொழியச் செய்தது, துரோகி.

இந்தத் தீர்மானத்தில் அவரை வெகுவாக புகழ்ந்து பேசியது, துரோகி. சென்னை மெரினாவில் முன்னாள் முதலமைச்சருக்கு (கருணாநிதி) மணிமண்டபம் கட்டுவது தொடர்பாக துரைமுருகன் துரோகியை சந்தித்து இருக்கிறார். அப்போது, துரோகி என்ன சொன்னார் என்பதை துரைமுருகன் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார்.

இது போன்ற நடவடிக்கைகளில் இருந்து, திமுகவின் 'பி' டீம் துரோகி என்பது கண்கூடாகத் தெரிகிறது. இது போன்ற செயல்களும், கொலை, கொள்ளை வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக ரகசியமாக சந்திப்பது, தூது விடுவது போன்றவைதான் திமுகவின் 'பி' டீம் என்பதற்கான உதாரணங்கள் ஆகும்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்த போதும், தற்போதும் திமுகவின் 'பி' டீமாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர், துரோகி. இதனை அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். அடுத்ததாக கட்சியின் அரசியல் ஆலோசகரும், மூத்த அரசியல்வாதியுமான பண்ருட்டி ராமச்சந்திரனை கிளைச் செயலாளருக்கு கூட தகுதி இல்லாதவர் என்று துரோகி விமர்சனம் செய்திருப்பது அவரது அறியாமையையும், ஆளுமைத் திறமையின்மையையும் கோடிட்டுக் காட்டுகிறது.

பண்ருட்டி ராமச்சந்திரன் அண்ணாவால் தமிழ்நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர். அரசு வேலையை உதறித் தள்ளிவிட்டு அரசியலுக்கு வந்தவர். எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் பல ஆண்டு காலம் அமைச்சர் பதவியை வகித்தவர். ஜெயலலிதாவின் அன்பைப் பெற்றவர். இவரை விமர்சனம் செய்வது என்பது ஆணவத்தின் வெளிப்பாடு.

கொலை வழக்கிலிருந்து தப்பியது எப்படி, சட்டமன்ற உறுப்பினரானது எப்படி, அமைச்சரானது எப்படி, முதலமைச்சரானது எப்படி, முதலமைச்சராக நான்கு ஆண்டு காலம் நீடித்தது எப்படி என்பதையெல்லாம் மறந்து, மனம் போன போக்கில் துரோகி பேட்டி அளித்திருப்பதைப் பார்க்கும்போது 'மனம் ஒரு குரங்கு’ என்ற பூரமொழிதான் நினைவிற்கு வருகிறது.

முதலமைச்சரை ஓபிஎஸ் அரை மணி நேரம் சந்தித்துப் பேசினார் என்று துரோகி கூறியபோது அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவதாகவும், நிரூபிக்க முடியாவிட்டால் எடப்பாடி பழனிசாமி அரசியலிலிருந்து விலகுவாரா என ஓபிஎஸ் கேட்டார். இதுநாள் வரை இதற்கு பதில் இல்லை.

அதேபோல, ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் சேர தூதுவிட்டதாக பேசினார், எடப்பாடி பழனிசாமி. இது ‘அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு’ என பேட்டி அளித்தார் ஓ.பன்னீர்செல்வம். இதற்கும் இதுநாள் வரை எந்தப் பதிலும் இல்லை. அந்த வகையில் தற்போது மற்றுமொரு பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டு இருக்கிறார், எடப்பாடி பழனிசாமி.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கோயபல்ஸ் வேலையை செய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இது நிச்சயம் தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் எடுபடாது. 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு’ என்பார்கள். ஆனால், கெட்டவனின் புளுகு எட்டு மணி நேரத்திற்கு கூட தாங்காது. அந்த வகையில் எடப்பாடி பழனிசாமியின் குட்டு வெளிப்பட்டு விட்டது.

திமுகவின் 'பி' டீமாக செயல்படுவது துரோகி என்பதை தொண்டர்களும், மக்களும் புரிந்து கொண்டு விட்டார்கள். துரோகியின் பேட்டிகளைப் பார்க்கும்போது 'துள்ளுகிற மாடு பொதி சுமக்காது' என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது. அதாவது துள்ளுபவர்கள் பொறுப்பை ஏற்க மாட்டார்கள்.

துள்ளாத தலைவனுக்கு மக்கள் வாக்களிக்க முடிவெடுத்து விட்டார்கள். ‘எப்படிப்பட்ட பாவத்தைச் செய்தவர்க்கும் அதிலிருந்து தப்பிக்க வழி உண்டு. செய்நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வேறு மார்க்கம் இல்லை’ என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, துரோகி அவர் செய்த பாவத்திலிருந்து என்றைக்கும் விடுபட முடியாது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: O Panneerselvam: டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு.. அதிமுகவில் அரசியல் மாற்றம் நிகழுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.