ETV Bharat / state

TNPSC: குரூப் 4 பணியிடங்களை 15,000-ஆக அதிகரிக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

author img

By

Published : May 31, 2023, 12:23 PM IST

குரூப் 4 பதவிகளுக்கான போட்டித் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 15 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

குரூப் 4 தேர்வு மூலம் 15,000 பணியிடங்களை நிரப்புக - ஓபிஎஸ் வலியுறுத்தல்
குரூப் 4 தேர்வு மூலம் 15,000 பணியிடங்களை நிரப்புக - ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: இது தொடர்பாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுத் துறைகளிலும், கல்வி நிலையங்களிலும் காலியாக உள்ள 3.5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் கூட நிரப்பப்படவில்லை. இது அரசுப் பணியை எதிர்பார்த்திருந்த இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குரூப் 4, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 1 ஆகியவற்றில் அடங்கிய பதவிகளுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். கரோனாத் தொற்று காரணமாக, இரண்டு, மூன்று ஆண்டுகள் போட்டித் தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், 2022ஆம் ஆண்டு குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது.

இதற்கான தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 24 அன்று நடைபெற்று, மிகப் பெரிய இழுபறிக்கு பின்னர் இந்த ஆண்டு மார்ச் 24 அன்று முடிவுகள் வெளியிடப்பட்டது. இதன்மூலம், 10 ஆயிரத்து 117 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்றைய நிலையில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4.5 லட்சமாக உயர்ந்துள்ளது.

இன்று அனைத்துத் துறைகளிலும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலைப் பளுவை சமாளிக்க பல துறைகளில் தொகுப்பு ஊதியத்தில் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் அரசுப் பணியாளர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே உள்ளனர்.

குரூப் 4இல் அடங்கியுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர் பணியிடங்கள் பெரும்பாலான துறைகளில் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களின் எண்ணிக்கையே சுமார் ஒரு லட்சம் இருக்கின்ற நிலையில், 2022ஆம் ஆண்டு போட்டித் தேர்வின் மூலம் 10 ஆயிரத்து 117 காலிப் பணியிடங்களை மட்டுமே நிரப்பப்படும் என்று அரசு அறிவித்து இருப்பது இளைஞர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

18 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதிய நிலையில், 10 ஆயிரத்து 117 காலிப் பணியிடங்கள் என்பது ஒரு சதவீதத்திற்கும் குறைவானதாகும். இந்த நிலையில், 2023ஆம் ஆண்டிற்கான குரூப் 4 போட்டித் தேர்வு 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்படும் என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பு, இளைஞர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முறையான காலிப் பணியிடங்களை ஆண்டுக்காண்டு நிரப்பாமல், தொகுப்பூதிய அடிப்படையிலேயே அரசுப் பணிகளை மேற்கொண்டு, செலவை மிச்சப்படுத்தலாம் என்று திமுக அரசு நினைக்கிறதோ என்ற சந்தேகம் இளைஞர்களிடையே எழுந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள ஒரு பணியிடம் கூட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்படவில்லை என்பது வேதனையளிக்கும் செயலாகும்.

திமுக அரசின் இந்தச் செயல்பாடு 'சொல்வது ஒன்று, செய்வது ஒன்று' என்பதற்கேற்ப அமைந்துள்ளது. அரசுத் துறைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசாங்கத்திற்கு உண்டு. அப்போதுதான் ஓர் அரசு திறம்பட செயல்பட முடியும்.

திமுக அரசின் செயல்பாடு சிறப்பாக இல்லாததற்கு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததும் ஒரு காரணம் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும், இரண்டு, மூன்று ஆண்டுகள் தேர்வு நடத்தப்படாதது மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், அரசு நிர்வாகம் திறம்பட செயல்பட வேண்டும் என்பதை மனதில் நிலைநிறுத்தியும், 2022ஆம் ஆண்டு குரூப் 4 பதவிகளுக்கான போட்டித் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 15 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

2023ஆம் ஆண்டிற்கான போட்டித் தேர்வை இந்த ஆண்டே நடத்தி, அதன் மூலம் 50 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பவும், இனி வரும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வினை நடத்தி, உடனுக்குடன் முடிவுகளை வெளியிட்டு, காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களை நிரப்பவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘வசூல் ராஜா’ பட பாணியில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு - ட்ரான்ஸ்மீட்டர் மூலம் தேர்வெழுதிய மாணவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.