ETV Bharat / state

ஜெயிலர் ரிலீஸில் அதிகாலை நேரக் காட்சிகள் இல்லை... பின்னணி என்ன?

author img

By

Published : Aug 8, 2023, 9:41 PM IST

ஜெயிலர் பட ரசிகர்கள் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்பது ரஜினியை பழிவாங்கும் திட்டமா? என்பது குறித்து விளக்குகிறது, இந்த செய்தித் தொகுப்பு...

ஜெயிலர் ரிலீஸ் அதிகாலை நேர காட்சிகள் இல்லை..பின்னணி என்ன?
ஜெயிலர் ரிலீஸ் அதிகாலை நேர காட்சிகள் இல்லை..பின்னணி என்ன?

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி

சென்னை: இந்திய‌ சினிமா உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் நடிகர் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட 4 தசாப்தங்களாக மக்களை மகிழ்வித்து வரும் இவர் என்றுமே சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இந்த நிலையில் தற்போது அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சை சமீபகாலமாக எழுந்துள்ளது.

நடிகர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும், சிவகார்த்திகேயன் குட்டி ரஜினி என ஆளாளுக்கு ஏதோ ஒன்றை பேசி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது "ஜெயிலர்" திரைப்படம். ரஜினியின் சமீபத்திய படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறாத நிலையில், நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தை ரஜினிகாந்த் மற்றும் ரசிகர்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.

ரஜினியின் முந்தைய படங்கள்: இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த "தர்பார்" மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது. படமும் சரியாக போகவில்லை. அதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான படம் "அண்ணாத்த", அந்தப் படமும் நெட்டிசன்களின் கேளிக்கைக்கு உண்டானது. பொதுவாக ரஜினியின் படங்கள் ரிலீஸ் என்றாலே திருவிழாவாக கொண்டாடப்படும் என்ற கருத்து, சமீப காலங்களாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்

இதனால் "ஜெயிலர்" படத்தை எப்படியாவது வெற்றிப் படமாக கொடுத்து தான் மீண்டும் யானை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ரஜினிகாந்த் உள்ளார். இப்படத்தில் தமன்னா, கன்னட நடிகர் சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், மலையாள நடிகர் மோகன் லால் எனப் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த நடிகர்கள் நடித்துள்ளனர்‌. யார் நடித்து இருந்தாலும் அது ரஜினி படம்தான் என்ற நிலை இருந்து வந்தது.

அனிருத் இசையில் வெளியான முதல் பாடலான காவாலாவில் ரஜினியை தேடும் நிலை இருந்தது‌. இது சமூக வலைத்தளங்களில் கேளிக்கைகளுக்கு உண்டானது. ரஜினி படத்தில் வெளியான ஒரு பாடலில் ரஜினியை தேடவேண்டிய நிலை ஏற்பட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

சிறப்புக் காட்சிகள் ரத்து: மேலும் இந்நிலையில் ஜெயிலர் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ரஜினி ரசிகர்கள் மத்தியில் மன வருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு காட்சிகளை அறிமுகப்படுத்தியதே ரஜினிகாந்தின் படங்கள் தான். ஆனால், தற்போது அவரது படத்திற்கே சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக முன்னணி நடிகர்களின் எந்தப் படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கடந்த பொங்கலுக்கு அஜித்தின் "துணிவு" மற்றும் விஜயின் "வாரிசு" படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இந்த இரண்டு படங்களுக்கும் அனுமதியின்றி நள்ளிரவு, அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன. இதனால் எழுந்த சர்ச்சையின் காரணமாக சமீப காலமாக எந்தப் படங்களுக்கும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்குவதில்லை.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்

இதைக் காரணம் காட்டி "ஜெயிலர்" படத்திற்கும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இதனால் தமிழகத்தில் சுமார் 700 திரையரங்குகளில் வெளியாகும் ரஜினிகாந்தின் "ஜெயிலர்" படம் காலை 9 மணிக்குதான் முதல் காட்சி தொடங்குகிறது. இருப்பினும் டிக்கெட் முன்பதிவு சிறப்பாக இருந்தால் இதுவரை வந்த ரஜினி படங்களின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியை பழிவாங்கும் திட்டமா? இது ஒருபுறம் இருக்க, மற்றொரு தகவலும் பரவி வருகிறது. அதாவது கமல்ஹாசன் நடித்த விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் படங்களின் வசூலை ஜெயிலர் முறியடிக்கக் கூடாது என்பதற்காகத் தான் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் சிலரால் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. என்ன இருந்தாலும் ரஜினி படங்கள் முதல் நாள் வசூலில் எப்போதுமே நம்பர்‌ ஒன் தான்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் படங்களுக்கு மட்டுமே சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிப்பதாக குற்றச்சாட்டும் வந்துள்ளது. இது ரஜினியை பழிவாங்கும் நடவடிக்கை எனவும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படமாக இது இருக்கையில், பிறகு எப்படி இது பழி வாங்கும் நடவடிக்கையாக இருக்க முடியும், என்றும் கருத்து நிலவுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி கூறும்போது, ''பண்டிகை காலங்களில் வெளியாகும் எந்தப் படமாக இருந்தாலும் அரசு சார்பில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு முன் இருந்த அரசும் இப்படித்தான் செய்தது. தற்போது அரசிடம் நாங்கள் காட்சிகளை அதிகப்படுத்த அனுமதி கோரியுள்ளோம்‌. வழங்கலாமா வேண்டாமா என்பது அரசின் முடிவு‌‌" என்று தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ எப்போது வந்தாலும், எப்படி வந்தாலும் ரஜினி ரஜினிதான் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. மேலும் ஜெயிலர் நிச்சயம் வெல்லும் என்றும் ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: தீ பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசுனாதான் நெருப்பு வரும்.. ரீ-ரிலீஸ் ஆகும் ரஜினியின் மூன்று முகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.