சென்னை :மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்ய முயன்ற போலீசாரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் மயிலாடுதுறையை சேர்ந்த சாதிக் பாஷா, ஜாபர் அலி, கோவையை சேர்ந்த முகமது ஆஷிக், காரைக்காலை சேர்ந்த முகமது இர்பான், சென்னையை சேர்ந்த ரஹ்மத் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சிறையில் உள்ள இந்த கும்பலுக்கு, தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றப்பட்டது.
சாதிஷ் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் சமூக வலைதளம் வாயிலாக ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்ததும், பல இடங்களில் ரகசிய கூட்டங்கள் நடத்தி துண்டு பிரசுரங்களை வழங்கி வந்ததும் என்.ஐ.ஏவிற்கு தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான 8 இடங்களில் என்ஐஏ தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக சென்னையில் கொருக்குப்பேட்டை, மண்ணடியில் உள்ள ஒரு வீடு என 3 இடங்களிலும், மயிலாடுதுறை, காரைக்கால், கோவை என மொத்தம் 8 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கும்பலுக்கும் தீவிரவாத ஐ.எஸ் அமைப்பிற்கும் நேரடி தொடர்பு உள்ளதா, இவர்கள் கூட்டம் நடத்த நிதி உதவி எங்கிருந்து பெறப்படுகிறது உள்ளிட்ட ஆதாரங்களைத் திரட்டும் பணியில் என்.ஐ.ஏ ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இவர்களுக்கு வழங்கியது யார் என்ற ஆவணங்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவர்களுக்கு பின்னணியில் இருக்கும் நபர்கள் யார் என்று சேகரிக்கும் பணியிலும் என்.ஐ.ஏ தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பட்டியலின இளைஞரை காதலித்ததால் ஆத்திரம் - பெற்ற மகளை கழுத்தை நெரித்துக்கொன்ற தந்தை!