ETV Bharat / state

தமிழகத்தின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றுவேன்: தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா

author img

By

Published : Jun 1, 2023, 3:14 PM IST

CJ speech
மரபு

தமிழகத்தின் கலாச்சாரம், மரபுகளை தான் பின்பற்றுவேன் என சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா தெரிவித்துள்ளார்.

சென்னை: மும்பை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கும்படி, உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஏப்ரல் மாதம் பரிந்துரை செய்திருந்தது. அதன்படி, எஸ்வி.கங்கா பூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த மாதம் உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்வி.கங்கா பூர்வாலா கடந்த மே 28ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எஸ்.வி. கங்கா பூர்வாலாவுக்கு உயர்நீதிமன்றத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்த இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் புதிய நீதிபதியை வரவேற்று பேசினார்.

அப்போது அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் 52வது தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்றுள்ள நீதிபதி கங்கா பூர்வாலா, மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, இரு சார்ட்டர்டு உயர் நீதிமன்றங்களை வழி நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளது சாதாரணமானதல்ல என பாராட்டு தெரிவித்தார். தஞ்சாவூரை மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், சமூக நீதி மாநிலமான தமிழ்நாட்டுக்கும், மகாராஷ்டிராவுக்கு பன்னெடுங்காலமாக நெருங்கிய தொடர்புள்ளதாக தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் பதவிகளை, சமூக நீதியை பின்பற்றி நிரப்ப வேண்டும் எனவும், மாவட்ட நீதித்துறை காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகளும் புதிய தலைமை நீதிபதியை வரவேற்றுப் பேசினர்.

இதையடுத்து 'வணக்கம்' என தமிழில் கூறி, ஏற்புரையாற்றிய தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, தனக்கு அளித்த வரவேற்புக்கு 'நன்றி' எனவும் தமிழில் குறிப்பிட்டார். தொடர்ந்து அவர், பல சான்றோர்களையும், கலை கலாச்சார செறிவு கொண்ட தமிழகத்தில் பணியாற்றுவது கெளரவமானது எனத் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றம், பல உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும், சட்ட வல்லுனர்களையும் தந்துள்ளதைச் சுட்டிக் காட்டிய அவர், இளையவர்களும் அந்த பெருமையை தொடர்ந்து அடுத்த இடத்துக்கு எடுத்துச் செல்வர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

முடிவுகள் எடுக்கும் போது, அனைத்து தரப்பினரின் நம்பிக்கையை பெறப்படும் எனவும், நீதிமன்றங்களில் எவருக்கேனும் குறைகள் இருந்தால் அது நிவர்த்தி செய்யப்படும் எனவும் உறுதி தெரிவித்த தலைமை நீதிபதி, தமிழகத்தின் மரபு, கலாச்சாரங்களை பின்பற்றி வாழ்வேன் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குறைகளை அடுக்கிய திமுக கவுன்சிலர்.. போதும் உட்காருங்க என கூறிய மேயர்.. திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.