ETV Bharat / state

தமிழகத்தில் எம்பிக்கள் எண்ணிக்கையை 31 ஆக குறைக்க மத்திய அரசு திட்டம்: உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு புகார்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 10:07 PM IST

Udhayanidhi Stalin: சென்னையில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தென் மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, மக்களின் குரல்களை மத்திய அரசு நசுக்கப் பார்ப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு பெரும் சதித் திட்டத்தைத் தீட்டி வருகிறது என்றார். 1970களில், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசு ஊக்குவித்ததாகவும், அதனைத் தென்னிந்திய மாநிலங்கள் திறம்படச் செயல்படுத்தின இதனால் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது ஆனால் தற்போது இவை நமக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் முறையாகத் தொகுதிகள் ஒதுக்க வேண்டும். அதன்படி தான் 1952 மற்றும் 1963 ஆம் ஆண்டுகளில் ஆணையங்கள் உருவாக்கப்பட்டன. இந்த ஆணையங்கள் இரண்டு விஷயங்களைப் பரிந்துரைத்தன, ஒன்று நாடாளுமன்றத்தில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் சட்டமன்ற இடங்களின் எண்ணிக்கை ஆனால் அது தற்போது கேள்வி குறிக்குறியாகியுள்ளது என்றார்.

மேலும், மத்திய அரசு 1970களில் இந்தக் கொள்கை அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் கைவிடப்பட்டது. 1976 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்டத் திருத்தம் 2000 ஆம் ஆண்டு வரை மக்களவையின் இடங்களின் எண்ணிக்கையை முடக்கியது. 2001ல், இந்தப் பிரச்சினை வந்தபோது, இடங்களை இழக்க வாய்ப்புள்ள மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த எதிர்ப்பின் காரணமாக, அப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மற்றொரு அரசியலமைப்பு திருத்தத்தை - அரசியலமைப்பின் 84 வது திருத்தத்தை - மேலும் 25 ஆண்டுகளுக்கு முடக்கத்தை - 2026 வரை நீட்டித்தது.

தற்போது மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் என்பதின் படி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும். குறிப்பாகத் தமிழ்நாடு 39 இடங்களிலிருந்து 31 இடங்களாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தென் மாநில மக்களின் குரல்களை நசுக்க மத்திய அரசு நினைக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு மக்களின் உரிமைக்காகத் தொடர்ந்து போராடும் என்றார்.

மேலும், அண்மையில் தான் பேசிய கருத்தை(சனாதன தர்மம்) பாரதிய ஜனதா கட்சியினர் வேண்டுமென்றே திரித்துக் கூறி பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதையும் படிங்க: "காவிரியில் 16,000 கன அடி தண்ணீர் திறக்க கோரிக்கை வைப்போம்" - அமைச்சர் துரைமுருகன் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.