ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது? - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 12:08 PM IST

Minister Thangam Thennarasu Statement: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி 2 மற்றும் தொகுதி 2அ தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி டிசம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் முடிவடைந்துவிடும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி 2 மற்றும் தொகுதி 2அ (TNPSC Group 2, 2A) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வின் முடிவுகளை வெளியிட காலதாமதம் ஆவதாக வெளிவந்த பத்திரிகை செய்திகள் குறித்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி 2 (Group 2) மற்றும் 2 அ (Group 2A) பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ் மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய இரு தாள்களுக்கும் 25.2.2023 அன்று 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வை எழுதியுள்ளனர். இது மத்திய அரசின் குடிமைப்பணித் தேர்வாணையம் நடத்தும் முதன்மை எழுத்து தேர்வு எழுதும் நபர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மும்மடங்கு அதிகமாகும்.

இத்தேர்வு முடிவுகளை வெளியிட மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வாணையம் எடுத்துக்கொள்ளும் கால அளவு சுமார் ஐந்து மாதங்களாகும். எனவே, மத்திய அரசின் தேர்வாணையத்தின் செயல்திறனுக்கு மாநில அரசின் தேர்வாணையத்தின் செயல்திறன் எந்த வகையிலும் குறைவானது இல்லை. மேலும், இப்பணி துவக்கப்பட்ட மார்ச் மாதத்தில் தேர்வாணையத்தில் ஒரு கணிப்பொறி ஆய்வகம் மட்டுமே இருந்தது.

வேறு சில தேர்வுகளின் எழுத்துத் தேர்வு விடைத்தாள்களும் திருத்த வேண்டிய நிலையில் இருந்ததால், இப்பணிகள் ஆரம்பிக்க சற்றே தாமதமானது. இது போன்ற தாமதம் தற்போது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் வரக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாவது கணிப்பொறி மதிப்பீட்டு ஆய்வகம் அமைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, போர்க்கால அடிப்படையில் இரண்டாவது கணிப்பொறி ஆய்வகம் அமைக்கப்பட்டது.

இதனால் தற்போது மதிப்பீட்டுப் பணிகள் மிக விரைவாக செவ்வனே நடைபெற்று வருகின்றன. 80 விழுக்காட்டிற்கும் மேல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. எஞ்சியுள்ள பணிகள் வரும் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு, சுமார் 6 ஆயிரம் பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் முதலமைச்சரால் வழங்கப்படும். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 13 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

அண்மையில் முதலமைச்சரால், தொகுதி 4 பணியில் தேர்வு பெற்ற பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 2023- 2024ஆம் ஆண்டில் மேலும் சுமார் 10 ஆயிரம் நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 11 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி நாட்டுப்புறக் கலைஞர்கள் போராட்டம் - துணை இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.