ETV Bharat / state

அமைச்சர் பொன்முடியின் டிஜிட்டல் ஆவணங்களை ஆய்வுசெய்த அமலாக்கத்துறையினர்!

author img

By

Published : Jul 19, 2023, 7:55 PM IST

அமைச்சர் பொன்முடி வீட்டில் பறிமுதல் செய்த டிஜிட்டல் ஆவணங்களை அமலாக்கத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

minister-ponmudis-digital-documents-are-examined-by-the-ed
அமைச்சர் பொன்முடியின் டிஜிட்டல் ஆவணங்களை அமலாக்கத்துறையினர் ஆய்வு !

அமைச்சர் பொன்முடியின் டிஜிட்டல் ஆவணங்களை ஆய்வுசெய்த அமலாக்கத்துறையினர்!

சென்னை: தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மூத்த மகன் கெளதம சிகாமணி மற்றும் இளைய மகன் அசோக் சிகாமணி ஆகியோருக்குச் சொந்தமான சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். குறிப்பாக திமுக ஆட்சிக்காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது, அவரது மகன் கௌதம சிகாமணியுடன் இணைந்து குவாரிகளில் முறைகேட்டில் ஈடுபட்டு அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாகவும், அதன் மூலமாக வெளிநாட்டில் பங்குகளை வாங்கி பினாமி பெயரில் சொத்துகளை குவித்திருப்பதாகவும் அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சோதனையில் சென்னை - சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடி வீட்டில் இருந்து, கணக்கில் காட்டப்படாத 81 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 13 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்ஸிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவரது வங்கி இருப்பில் வைத்திருந்த 41 கோடி ரூபாயை அமலாக்கத்துறையினர் முடக்கினர்.

இந்த சோதனைக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியை, அவரது அரசு வாகனத்திலேயே அமரவைத்து சி.ஆர்.பி.எப் பாதுகாப்புடன் சென்னை - சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம் தொடர்பாக 6 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டு வாக்குமூலங்களை வீடியோவாகப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து மீண்டும் அளித்த சம்மனின் அடிப்படையில் இரண்டாவது முறையாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்.பி.யுமான கௌதம சிகாமணி நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி 6 மணி நேரம் விளக்கம் அளித்தனர். குறிப்பாக சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் 41 கோடி ரூபாய் வைப்புத்தொகை மற்றும் முக்கிய ஆவணங்களை வைத்து, விழுப்புரம் மாவட்ட போலீசாரிடம் இருந்து பெறப்பட்டுள்ள ஆவணங்களுடன் ஒப்பிட்டு விசாரணையை, தனித்தனியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் பொன்முடி மற்றும் அவரது மகன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சட்டவிரோதமாக சம்பாதித்த பணம் தொடர்பான உரிய ஆவணங்களை பொன்முடியின் ஆடிட்டரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

அதனடிப்படையில் இன்று காலை 11 மணியளவில் ஆஜரான பொன்முடியின் ஆடிட்டர் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பித்து விளக்கம் அளித்தார். பின்னர் மாலை 3.30 மணியளவில் விசாரணை முடிந்து அவரது ஆடிட்டர் காரில் புறப்பட்டுச் சென்றார்.

இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து மீண்டும் அவர்களுக்கு 3-வது முறையாக சம்மன் அளிக்க வாய்ப்புள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு; ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.