ETV Bharat / state

'மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எந்த வழக்குகளில் இருந்தும் விலகப்போவதில்லை' - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 8:24 PM IST

திமுக அமைச்சர்கள் மீது இன்று நடந்த விசாரணையில், மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எந்த வழக்குகளில் இருந்தும் தான் விலகப்போவதில்லை என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

அமைச்சர்களின் வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி
அமைச்சர்களின் வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி

சென்னை: 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையிலான திமுக ஆட்சி காலகட்டத்தில் 44 லட்சத்து 59 ஆயிரத்து 67 ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமானத்திற்கு அதிகமாக சேர்த்ததாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூர்த்தி ஆகியோர் மீது 2011ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைப்போல 2006ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி முதல் 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையிலான ஆட்சிக்காலத்தில் 76 லட்சத்து 40 ஆயிரத்து 443 ரூபாய் சொத்து குவித்ததாக 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்குகளை ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்த நிலையில், இந்த இரு வழக்குகளிலிருந்தும் அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்புகளை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து கிரிமினல் ரிவிசன் பெட்டிசன் என்ற அடிப்படையில் தனித்தனி வழக்குகளாக விசாரணைக்கு எடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையும், இரு அமைச்சர்கள் உள்ளிட்ட குற்றம்சாட்டபட்டவர்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்குகள் இன்று (செப் 20) மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தரப்பில், கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சட்டவிரோதம் என இந்த நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுவதாக தெரிவித்து, வழக்கின் விசாரணையிலிருந்து நீதிபதி விலக வேண்டும் என வாதிடப்பட்டது.

தொடர்ந்து தங்கம் தென்னரசு தரப்பில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு வரக்கூடிய ஒரு விசயத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தால், அதை எந்த நீதிபதி விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார். இதற்கு பதிலளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “தலைமை நீதிபதி அனுமதி பெற்றுதான், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளேன். எந்த வழக்கின் விசாரணையிலிருந்தும் விலகப்போவதில்லை" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, தான் எடுத்த வழக்குகளிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள் எவரும், இந்த வழக்குகளை எதிர்த்து ஏன் உச்ச நீதிமன்றத்தை நாடவில்லை என்று ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு தரப்பிடம் சராமாரியாகக் கேள்வி எழுப்பினார். பின்னர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான வழக்கை நவம்பர் 2ஆம் தேதிக்கும், தங்கம் தென்னரசு மீதான வழக்கை நவம்பர் 9ஆம் தேதிக்கும் ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.