ETV Bharat / state

Matrimonial fraud: திருமண தகவல் இணைய தளங்களில் தொடரும் பண மோசடி- மத்திய மாநில அரசுகள் ஒழுங்கு விதிகளை அமல்படுத்த வற்புறுத்திய நீதிமன்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 7:47 PM IST

திருமண தகவல் இணைய தளங்களில் ஏற்படும் பண மோசடிகளை தவிர்க்க புதிய விதிகள் விதிக்க வேண்டும் என மத்திய மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமண தகவல் இணைய தளங்களில் தொடரும் பண மோசடி
திருமண தகவல் இணைய தளங்களில் தொடரும் பண மோசடி

சென்னை: திருமண தகவல் இணைய தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் டாக்டர் ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி 80 பவுன் நகை மற்றும் 68 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னை கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில், முன் ஜாமீன் கோரி பிரசன்னா என்ற சக்கரவர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சக்கரவர்த்தி தரப்பில் ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் தாம் புகார் அளித்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற அவரது ஆசையை நிராகரித்தததால், தனக்கு எதிராக புகார் அளித்துள்ளதாக வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில், கிறிஸ்துவ திருமண தகவல் இணையதளத்தில் பதிவு செய்து பெண் டாக்டரான புகார்தாரரை சக்கரவர்த்தி ஏமாற்றியுள்ளதாக அளிக்கப்பட்ட புகாரில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பெண் டாக்டர் தரப்பில், சக்ரவர்த்தி தன்னை டாக்டர் என கூறிக்கொண்டு, தன் பெற்றோரிடம் பேசிய பிறகு, இருவரும் பழகிய நிலையில், 68 லட்ச ரூபாயை பணமும், 80 சவரன் தங்க நகைகளையும் அபகரித்துக் கொண்டதாக தெரிவிக்க்பபட்டது.

வயது முதிர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், விவகாரத்து ஆனவர்கள் ஆகியோரை குறிவைத்து மோசடி செய்வது தான் சக்ரவர்த்தியின் வாடிக்கை என்றும், 17 க்கும் மேற்பட்ட பெண்களை இவர் ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக செய்திகள் வெளியானது என்றும் நீதிபதி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. எனவே சக்கரவர்த்திக்கு முன் ஜாமீன் கொடுக்க கூடாது என்று இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டீக்காராமன், முன் ஜாமீன் கோரிய சக்கரவர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரது உத்தரவில், திருமண இணையதள மோசடிகளில் பெரும்பாலும் பெண்களே ஏமாற்றப்படுகின்றனர். இது போன்ற இணையதளங்களை கட்டுப்படுத்த எந்த ஒரு சட்டமோ, விதிகளோ உருவாக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பதிவு செய்யும் ஆணோ அல்லது பென்ணோ அவர்களது பாஸ்போர்ட், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் தான் பதிவு செய்ய வேண்டும் என்ற விதி இருந்திருந்தால், மோசடிகள் தடுக்கப்படும் என்றும், மீறி நடந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அதனால் திருமண தகவல் இணைதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: Harkara movie: ஹர்காரா படம் "ஓட்டத் தூதுவன் 1854" படத்தின் காப்பியா - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.