ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரத்தான தேர்வுக்கு கட்டணம் வசூலித்தது செல்லும்!

author img

By

Published : Nov 30, 2020, 11:20 AM IST

Updated : Nov 30, 2020, 12:30 PM IST

MHC Accepts Anna University Register decision on cancelled exam fees
MHC Accepts Anna University Register decision on cancelled exam fees

11:02 November 30

சென்னை: கரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட கல்லூரி தேர்வுகளுக்கு கட்டணம் வசூலிக்க அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கரோனா ஊரடங்கின் காரணமாக இறுதியாண்டு பருவத் தேர்வை தவிர, மற்ற அனைத்து பருவதேர்வுகளையும் ரத்து செய்துள்ள நிலையில், மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் தேர்வு கட்டணத்தை செலுத்த அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் உத்தரவிட்டிருந்தார்.தேர்வு கட்டணம் செலுத்த நிர்பந்திக்க கூடாது என அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பயிலும் ஹரிஹரன், சுதன், சௌந்தர்யா, தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சங்கம் ஆகியோர் வழக்குகளை தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், தேர்வு நடத்தப்படாத நிலையில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு ஒரு விடைத்தாளுக்கு 42 ரூபாய் என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் 4 லட்சம் மாணவரிடமிருந்து 13 கோடியே 44 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகலில் பயிலும் 7 லட்சம் மாணவர்களிடம் தலா 1450 வீதம் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக வாதிடப்பட்டது.  

கரோனா ஊரடங்கால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் பெற்றோர்கள் சிக்கித் தவிக்கும் இந்த சூழலில் தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களின் முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

அண்ணா பல்கலைகழகம் தரப்பில், ஒரு தேர்வுக்கு ஒரு மாணவருக்கான கேள்வித்தாள், விடைத்தாள் தயாரிப்பதற்கான ஊதியம், ஆய்வக செலவுகள், இணையதள இணைப்பு, மதிப்பெண் சான்றிதழ், என 148 ரூபாய் செலவிடப்படுவதால், ஒரு தேர்விற்கு 150 வீதம் கட்டணமாக வசூலிக்கப்பட்டதாகவும், 2020 ஏப்ரல் மாதமே தேர்வுகள் வழக்கம்போல நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில், விடைத்தாள் திருத்தும் செலவை தவிர மற்ற அனைத்தும் முடிந்துவிட்டதாகவும்,அதன்படி ஒரு மாணவரின் ஒரு தேர்வுக்கு தற்போது 126 ரூபாய் 10 பைசா செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த கட்டணம் நியாயமானதுதான் எனவும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளதாகவும், கட்டணத்தை திருப்பி செலுத்த உத்தரவிட்டால் பல்கலைக்கழகத்துக்கு நிதி சுமையை ஏற்படுத்துவதோடு, தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டதால் மனுதாரர்களின் கோரிக்கை ஏற்க முடியாது என கூறி அந்த மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், ரத்து செய்யப்பட்ட கல்லூரி தேர்வுகளுக்கு கட்டணம் வசூலித்த அண்ணா பல்கலைக்கழக பதிவாளரின் உத்தரவு செல்லும் என உத்தரவிட்டுள்ளார். மாணவர்களிடம் வசூலித்த தேர்வு கட்டணத்தை 4 வாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திடம் அந்தந்த கல்லூரிகள் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Nov 30, 2020, 12:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.