ETV Bharat / state

Madras IIT: சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை: விசாரணை குழு அமைப்பு!

author img

By

Published : Apr 26, 2023, 6:39 AM IST

சென்னை ஐஐடியில் கடந்த மார்ச் 31ஆம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் ஜெயின் இறந்தது குறித்து விசாரணை செய்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி தலைமையில் குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னை ஐஐடியில் கரோனா பெருந்தொற்று பரவல் கட்டுப்பாடுகளுக்கு பின்னர் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இரு மாதங்களில் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மாணவர்கள் தற்கொலை தடுப்பதற்கும் ஐஐடி(Madras IIT) நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி சென்னை ஐஐடியில் படித்து வரும் ஆராய்ச்சி மாணவர் சச்சின் ஜெயின் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விசாரணை செய்து அறிக்கை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி திலகவதி தலைமையில் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் சபிதா, கண்ணகி பாக்கியநாதன், சென்னை ஐஐடியின் பேராசிரியர் ரவீந்திர ஜுட்டு, ஆர்எச் மாணவர் அமல் மனோகரன் ஆகியோர் உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஐஐடி நிர்வாகம் இந்த குழுவை அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும் போது, "சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தேசிய நல்வாழ்வு குடும்பத்துடன் இணைந்து மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஐஐடியில் இருக்கும் மாணவர்கள் தங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் வகையில் 'பி ஹேப்பி' என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்து கொள்வது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதற்கான காரணங்கள் குறித்து குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மே 1இல் கிராம சபைக் கூட்டம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.