ETV Bharat / state

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடந்த வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

author img

By

Published : Jun 6, 2023, 11:00 PM IST

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras
சட்டப்பேரவை

சென்னை: சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி, கடந்த 2015ஆம் ஆண்டு தேமுதிக சார்பில், அதன் தலைவர் விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், “மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன பேசுகிறார்கள்? எதற்காக குரல் கொடுக்கிறார்கள்? என்பதை வாக்களித்த மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால், தங்கள் தொகுதி உறுப்பினர்களின் செயல்பாடுகளை மக்களால் நேரலையில் தெரிந்து கொள்ள முடிகிறது.

அதேபோல, தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும், அவ்வாறு செய்யாததால் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை மக்களால் நேரடியாக தெரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் கோபம் கொண்டு அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புள்ளது.

நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாததால் ஆளுங்கட்சி மட்டுமே மக்கள் நலத்திட்டங்களை அறிவிப்பதாக மக்களுக்கு தெரிகிறது. எதிர்கட்சி மற்றும் இதர சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் மக்களுக்கு தெரியாமல் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. தங்கள் தொகுதிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ள அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உள்ளது. நேரடி ஒளிபரப்பு செய்யாமல் தடுப்பது என்பது மக்களின் உரிமைகளை பறிப்பதாக ஆகிவிடும். எனவே, சட்டமன்ற கூட்டத் தொடரை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கில், சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய தற்போது நடைமுறை சாத்தியமில்லை எனவும், அவைக் குறிப்புகளை உடனுக்குடன் இணையத்தில் வெளியிடுவதால் மக்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளை தெரிந்து கொள்ள முடியும் எனவும் சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று(ஜூன் 6) சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

முன்னதாக 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது, சிறிது காலத்திலேயே கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது, சட்டமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கையை உயர்த்தி ஆக்ரோஷமாக சண்டை போட்டார். இது தொடர்பாக விஜயகாந்தை பலரும் விமர்சித்தனர். ஆனால், சட்டப்பேரவையில் தனக்கு முன்னிருந்த கேமரா பதிவை மட்டுமே எடிட் செய்து வெளியிட்டதாக விஜயகாந்த் குற்றம் சாட்டினார். சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிப்பரப்பு செய்திருந்தால் அதிமுகவினர் செய்ததும் வெளிப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: Gokulraj murder case: கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை: உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.