ETV Bharat / state

லியோ படத்திற்கான அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க முடியாது - உயர் நீதிமன்றம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 11:46 AM IST

Updated : Oct 17, 2023, 12:39 PM IST

Leo Movie: லியோ திரைப்படத்திற்கான அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

madras-high-court-ordered-regards-leo-movie-early-morning-shows
லியோ சிறப்பு காட்சி அனுமதி வழங்க முடியாது உயர் நீதிமன்றம்

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடவும், அன்றைய தினத்தில் இருந்து 24ஆம் தேதி வரை காலை 7 மணியில் இருந்து காட்சிகள் திரையிட அனுமதி கோரியும் லியோ படக்குழு தரப்பு, தமிழ்நாடு அரசுக்கு விண்ணப்பித்திருந்தது.

இதை பரிசீலித்த அரசு, 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளித்தது. காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே திரையிட வேண்டும் எனவும், சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், அதிகாலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் எனவும், காலை 9 மணி என்பதை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் லியோ பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீரின் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அக்டோபர் 19ஆம் தேதி 2 சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்ததாகவும், ஆனால் ஒரு சிறப்புக் காட்சிக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மேலும், “அக்டோபர் 20 முதல் 24 வரை ஒரு கூடுதல் காட்சிக்கு கேட்டோம், கொடுத்திருக்கிறார்கள். ஆனால் 9 மணிக்குத்தான் திரையிட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக 9 மணி காட்சிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் இடையில் 30 நிமிட இடைவெளியும், படத்தில் 20 நிமிட இடைவேளையும் இருக்க வேண்டும் என்பதால், ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகளுக்கு 18 மணி நேரம் 45 நிமிடங்களாகும்.

ஆனால், காலை 9 மணிக்கு காட்சிகள் திரையிடத் துவங்கினால் 16 மணி நேரம் 30 நிமிடங்களில் 5 காட்சிகளை திரையிடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது” என்றார். அதனால் காலை 9 மணிக்குப் பதிலாக, காலை 7 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அரசு தரப்பில், கூடுதல் காட்சிகளை திரையிடுவதை ஒழுங்குபடுத்தக் கோரி மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மதுரைக்கிளை உத்தரவை பார்த்துவிட்டு, வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஏற்கனவே சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டதால் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்க அரசுக்கு உத்தரவிட முடியாது. அனைத்து காட்சிகளும் ரசிகர்களுக்கான காட்சி என்பதால், சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது. காலை காட்சிகளுக்கான அனுமதி குறித்து அரசிடம் மனு அளிக்கலாம். மனு மீது நாளை (அக் 18) மதியத்திற்குள் உரிய முடிவு எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண உரிமை கோரிய வழக்கு - 4 தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்றம்!

Last Updated : Oct 17, 2023, 12:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.