ETV Bharat / state

சிபிஎம் ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனு; தமிழக டிஜிபி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 2:24 PM IST

CPM procession: மத்திய அரசைக் கண்டித்து பேரணி நடத்த அனுமதி வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்துள்ள வழக்கில், தமிழக டிஜிபி விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

CPM procession
சிபிஎம் ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனுவில் தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: மத்திய அரசின் மதவாத கொள்கைகளைக் கண்டித்து பிரச்சார பயணம் மற்றும் பேரணி நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்துள்ள வழக்கில், தமிழக டிஜிபி நாளை (அக் .20) விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 60வது ஆண்டை முன்னிட்டு, மத்திய அரசின் மதவாத கொள்கைகளைக் கண்டித்தும், மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் அக்டோபர் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பிரச்சார பயணங்கள் மற்றும் பேரணி நடத்த அனுமதி கோரி தமிழக டிஜிபிக்கு அக்டோபர் 10ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து, இது குறித்து எந்தவொரு தீர்வும் கிடைக்காத நிலையில், இந்த மனுவைப் பரிசீலித்து பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத் மற்றும் ஆர்.திருமூர்த்தி ஆகியோர் ஆஜராகி, பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் அளிக்காத வகையில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் நிகழ்ச்சி நடத்த உள்ளோம் என்று தெரிவித்தனர்.

மேலும், தங்கள் கட்சியின் சார்பில் நடத்தக்கூடிய நிகழ்வுகளில் எந்த ஒரு சட்ட ஒழுங்கு பிரச்னையும் இதுவரையில் ஏற்பட்டது இல்லை என்றும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணியைக் காரணம் காட்டி தங்கள் பேரணிக்கு அனுமதி வழங்கினாலும் கடைசி நேரத்தில் காவல் துறை அனுமதி மறுக்க வாய்ப்புள்ளதால் இந்த வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தெரிவித்து, பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டனர்.

வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்துள்ள வழக்கு குறித்து தமிழக டிஜிபி நாளை (அக்.20) விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: துபாயில் இருந்து கடத்தி வந்த 2.7 கிலோ தங்கப் பசை பறிமுதல் - விமான நிலைய ஊழியர் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.