ETV Bharat / state

கலாஷேத்ரா பாலியல் புகார்: சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

author img

By

Published : Apr 26, 2023, 1:58 PM IST

கலாஷேத்ரா அறக்கட்டளை கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லை புகாரை தடுக்கும் வகையில் விரிவான கொள்கையை வகுக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், உள் புகார்கள் விசாரணைக் குழுவில் பெற்றோர், மாணவியர் பிரதிநிதிகளை சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court has ordered a comprehensive policy on the Kalakshetra sexual harassment issue
கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரத்தில் விரிவான கொள்கை வகுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை: திருவான்மியூரில் அமைந்துள்ள கலாஷேத்ரா கல்லூரியில், பேராசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதைத் தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து கலாஷேத்ராவில் நடைபெறும் பாலியல் தொந்தரவு பிரச்னை குறித்து விசாரணை நடத்துமாறு டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

பின்னர், சமூக வலைதளங்களில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக கூறப்பட்ட மாணவி, தன் மீது அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் டிஜிபிக்கு அனுப்பிய நோட்டீஸை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலாஷேத்ரா மாணவிகள் போராட்டத்தில் இறங்கினர். மாணவிகளின் போராட்டத்தை தொடர்ந்து இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் இடம் பெறக் கூடாது எனவும், குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் கோரி கல்லூரி மாணவிகள் 7 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், புகார் அளித்த மாணவிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என கலாஷேத்ராவுக்கு தடை விதிக்கவேண்டும் எனவும், பாலியல் தொல்லை அளித்தவர்கள் வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கவும், கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய தமிழ்நாடு மகளிர் ஆணையம், தனது அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணைக் குழுவை உயர் நீதிமன்றம் ஏன் நியமிக்கக் கூடாது என விளக்கமளிக்கும்படி கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும், மாணவிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை விதித்தும், மாநில மகளிர் ஆணைய அறிக்கையை சீல் வைத்த கவரில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த வழக்கில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிபதி தண்டபாணி, கலாஷேத்ரா அறக்கட்டளை அமைத்துள்ள உள் விசாரணைக் குழுவில் இடம் பெற்றவர்களின் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் கலாஷேத்ரா அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு, பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், பல்கலைக்கழக மானிய குழு சட்டம் உள்ளிட்ட சட்ட விதிகளின் அடிப்படையில் பாலியல் தொல்லைகள் தடுக்க விரிவான கொள்கை வகுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

கொள்கை வகுத்த பின் பாலியல் தொல்லை புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்படும் உள் விசாரணை குழுவில் (Internal Complaint Committee), மாணவிகள் மற்றும் பெற்றோரின் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். நிலுவையில் உள்ள இந்த வழக்கு, காவல் துறையோ, நீதிபதி கண்ணன் குழுவோ விசாரணையை தொடர தடையாக இருக்காது என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதேபோல மாணவிகளுக்கு ஆதரவான ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: வழிப்பறியில் இறங்கிய பாடி பில்டர் - கர்நாடகாவில் பிடிபட்டது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.