ETV Bharat / state

"பெண் குடியரசு தலைவராக இருக்கும் நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" - மாதர் சங்கம் ஆவேசம்!

author img

By

Published : Jul 22, 2023, 10:28 PM IST

மணிப்பூரில் நடந்த கலவரத்தை எதிர்த்து சென்னையில் மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாதர் சங்கத்தின் நிர்வாகி உ.வாசுகி மற்றும் உறுப்பினர்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.

சென்னையில் மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
சென்னையில் மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

சென்னை: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். மேலும், ஏராளமானோர் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில், 2 பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்ற வீடியோ கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் மாதர் சங்கம் சார்பில் சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் இன்று (ஜூலை 22) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தது பேசிய மாதர் சங்கம் நிர்வாகி உ. வாசுகி, "இந்திய நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை, கடந்த 70 நாட்களாக மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களுக்கு மாநில அரசோ, மத்திய அரசோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது வரை மௌனம் காப்பது ஏன்? மணிப்பூரில் இரண்டு பழங்குடி பெண்களுக்கு நடைபெற்ற தீங்கிற்கு எந்த ஒரு தீர்வும் இல்லை.

அந்த மணிப்பூர் மாநில அரசு பதவி விலக வேண்டும். கடமை தவறிய காவல் துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், மாநில அரசு அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த சம்பவம் நாடும் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மாநில அரசும் மத்திய அரசும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவில்லை. இந்த இரண்டு அரசுகளின்
மெத்தன போக்கை தான் இச்சம்பவம் வெளிப்படுத்துகிறது.

ஒரு பெண் குடியரசு தலைவராக இருக்கும் நாட்டில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இந்த நாட்டில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த போராட்டம் இரண்டும் பழங்குடி பெண்களுக்கானது மட்டும் இல்லை, இந்தியாவில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் தான். பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த சம்பவத்தில் அது 10 பேராக இருந்தாலும்,
ஆயிரம் பேராக இருந்தாலும் அனைவரும் உடனடியாக கைது செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.

இந்த போரட்டத்தில் மாதர் சங்க நிர்வாகி பி.சுகந்தி, பெண்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மஞ்சுளா, மேரிலில்லிபாய், பழனிபாரதி, செல்வி மற்றும் பெண்கள் பலர் இந்த கலந்து கொண்டனர். மேலும், மணிப்பூர் கலவரத்தை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் நாடு முழுவதும் பல போராட்டங்களை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Chennai: குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கான இந்திரதனுஷ் 5.0 தடுப்பூசி முகாம்: ஆகஸ்ட் 7 முதல் தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.