ETV Bharat / state

‘100 விழுக்காடு தடுப்பூசி பட்டியலில் விரைவில் தமிழ்நாடு’ - மா. சுப்பிரமணியன்

author img

By

Published : Oct 30, 2021, 2:02 PM IST

நவம்பர் இறுதிக்குள் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ma subramanian  vaccination camp  ma subramanian inspect vaccination camp  மா சுப்பிரமணியன்  தடுப்பூசி முகாம்  மெகா தடுப்பூசி முகாம்
மா சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் ஏழாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. இதில் சென்னை அடையாறு பகுதியில் கஸ்தூரிபாய் நகரில் உள்ள தடுப்பூசி முகாவினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி ஆணைநர் ககன்தீப் சிங் பேடி மற்றும் சுகாதார அலுவலர்கள் பங்கேற்றனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மா. சுப்பிரமணியன் பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 7ஆவது தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

ஆர்வமுடன் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 73 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 87 விழுகாட்டினர் முதல் தவணையும், 48 விழுகாட்டினர் இரண்டாவது தவணையும் செலுத்தியுள்ளனர். கடந்த 3 மாதங்களில் தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட வில்லை.

அதனால் நவம்பர் மாதத்திற்கு 1 கோடி 40 லட்சம் தடுப்பூசி ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நவம்பர் மாத இறுதிக்குள் 100 விழுக்காடு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெறும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நவம்பர் ஒன்றாம் தேதி திறக்கப்படும் பள்ளிகளை பொறுத்தவரை உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் விதிமுறைகளை பின்பற்றி தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாட வேண்டும்.

அம்மா உணவகம் மற்றும் அம்மா மினி கிளினிக் மையங்களில் கூடுதலாக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால், பணியாளர்களின் விவரம் கணக்கெடும் பணி நடைபெற்று வருகிறது. அதன் பிறகு பணியாளர்கள் அதிகமாக உள்ள மையங்களில் ஆள்கள் குறைக்கப்பட்டு, மாற்று இடத்தில் பணி வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், ஏற்கனவே முதலமைச்சர் தலைமையில் சேவை துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். டெங்கு வைரஸ் பாதிக்கப்பட்டு தற்போது தமிழ்நாடு முழுவதும் 400 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். டெங்கு வைரஸ் பாதிப்பால் தற்போது வரையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

வழக்கமாக மழைக்காலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பது வழக்கம். ஆனால் அதனைக் கட்டுப்படுத்த, சுகாதாரத்துறை உள்ளிட்ட சேவை துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 21,936 பணியாளர்களும், சென்னையில் 3,568 பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், 168 கொசு ஒழிப்பு வாகனங்களும், 215 கை தெளிப்பான்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் - மு.க. ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.