ETV Bharat / state

கே.வி.ஆனந்த் பிறந்தநாள் - நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள்

author img

By

Published : Oct 31, 2021, 5:09 PM IST

கே.வி.ஆனந்த்
கே.வி.ஆனந்த்

மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்தின் பிறந்த நாளையொட்டி அவரது நண்பர்கள் ஒன்றுகூடி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர், அயன், கவண் போன்ற வெற்றி படங்களைத் தந்தவர் இயக்குநர் கே.வி.ஆனந்த். இவர் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி கரோனா காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் நேற்று (அக்.30) மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்தின் பிறந்தநாள். அவரது நெருங்கிய நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகர் கூறுகையில், " நேற்று நண்பர் கே.வி.ஆனந்தின் பிறந்த நாள். அவர் மறைந்து சரியாக அரையாண்டு கழித்து அவரின் நண்பர்கள் கூடி அவரின் நினைவுகளை பகிர்ந்துகொண்டோம்.

உருக்கமான பதிவு

சூர்யா, ஹாரிஸ்ஜெயராஜ், ஆண்டனி, சுபா, எம்.எஸ்.பிரபு, ராகவன், ராம்ஜி, பாலமுருகன், கிரண், ஜெகன், கபிலன் வைரமுத்து என்று கலந்துகொண்டு பேசிய அனைவருமே உணர்ச்சிவசப்பட்டு பேசினர். பி.சி.ஸ்ரீராமும், திருவும் ஊரில் இல்லாததால் வீடியோ மூலம் பேசினார்கள். ஆனந்தின் உதவியாளர்கள் இணைந்து தயாரித்திருந்த வீடியோ பதிவின் அஞ்சலி மேலும் நெகிழ்த்தியது. ஒருங்கிணைத்த ஜெகன் நிறைய அனுபவங்கள் சொன்னார்.

35 வருட நண்பர் என்றாலும் அவரைப் பற்றி நேற்று புதிய தகவல்களை அறிந்துகொண்டோம். இது அவர் மீதான மதிப்பையும், மரியாதையையும் அதிகரித்துள்ளது. ஆனந்தின் குடும்பத்தினர் மரியாதை நிமித்தமாக சிற்றுண்டி வழங்கி உபசரித்திருந்தாலும், நினைவுகளின் அழுத்தத்தால் மனம் கனத்துப் போயிருந்ததால் யாராலும் ஈடுபாட்டுடன் சாப்பிட இயலவில்லை.

இன்னும் ஏற்கவும் முடியவில்லை

யார் யார் என்ன பேசினோம் என்பது விரைவில் யூ டியூபில் வரும் என்பதால் இங்கே குறிப்பிடவில்லை. ஆனால் ஆனந்தின் ஆத்மா அவரின் வழக்கமான சுபாவத்தின்படி ரொம்பவே கூச்சத்துடன் சங்கடப்பட்டிருக்கும் என்பது உண்மை. இன்னும் சாதிக்க பல கனவுகள் வைத்திருந்த ஆனந்தை கடவுள் கவர்ந்துசென்றதை இன்னும் ஏற்க முடியவில்லை. மன்னிக்கவும் முடியவில்லை" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'அப்பு எழுந்து வா, மீண்டு வா' - கண்ணீர் கடலில் ரசிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.