ETV Bharat / state

பாஜகவிடம் உள்ள அதிமுக எனும் அடமானப் பொருள் திரும்பி வந்தால் மகிழ்ச்சி: கி.வீரமணி விமர்சனம்

author img

By

Published : Feb 2, 2023, 1:56 PM IST

Updated : Feb 2, 2023, 10:46 PM IST

பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் அதிமுக எனும் அடமானப் பொருள் திரும்பி வந்தால் சந்தோஷம் என திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

பாஜகவிடம் உள்ள அதிமுக எனும் அடமானப் பொருள் திரும்பி வந்தால் மகிழ்ச்சி
பாஜகவிடம் உள்ள அதிமுக எனும் அடமானப் பொருள் திரும்பி வந்தால் மகிழ்ச்சி

பாஜகவிடம் உள்ள அதிமுக எனும் அடமானப் பொருள் திரும்பி வந்தால் மகிழ்ச்சி: கி.வீரமணி விமர்சனம்

சென்னை: வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி வீரமணி அடுத்த 40 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ள உள்ள தொடர் பரப்புரை பயணம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை ஈரோடு தொடங்கி தமிழ்நாடு முழுவதும் 40 நாட்களுக்கு 4 கட்டங்களாக சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை எனும் தலைப்பில் தொடர் பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறேன். இந்த தொடர் பரப்புரை பயணத்தில் சொற்பொழிவாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

மேலும் ராமர் பாலம் என்று சாக்கு காட்டி நிறுத்தப்பட்ட சேது சமுத்திர திட்டத்தை தொடங்கவும், என்எல்சி விவகாரம், இ.டபிள்யு. எஸ் (EWS) 10% இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர் பயணம் அமையும் என்றும், தினசரி ஒரு பெரிய நகரம் மற்றும் முக்கிய கிராமத்தில் இரண்டு பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் எனக் கூறினார்.

மேலும், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் கருணாநிதியின் பேனா சிலை கடலுக்குள் அமையாது. இது ஒரு பாசாங்குத்தனமே தவிர உண்மையல்ல. சுற்றுச்சூழலை வைத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிராக பிரச்சாரம் செய்வது புதிதல்ல. சீமான் சுய விளம்பரத்திற்காக சிலையை உடைப்பேன் என்கிறார். அவருக்கு விளம்பரம் தேடி தர தேவையில்லை என தெரிவித்த அவர், பூவுலகின் நண்பர்கள் சொன்ன கருத்து நல்லெண்ணம் கொண்டது தான். கருத்து கேட்பு என்பது திட்டத்தின் முதல் கட்டம் தான் என குறிப்பிட்டார்.

தற்போதைய அரசியல் சூழலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.ஏன் ரவி ஒரு பொருட்டே அல்ல. தமிழ்நாட்டின் நாடியை பிடித்து பார்த்த ஆளுநர் ரவி தற்போது விட்டுவிட்டார். ஆளுநர் என்னும் பாம்பு படம் எடுத்து பார்த்துவிட்டு தற்போது பெட்டிக்குள் போனாலும் நாங்கள் பாம்பாட்டிகளாகவே இருப்போம்" என்றார்.

தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக நிலைப்பாடு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், "அதிமுக எனும் அடமானப்பொருள் திரும்பி வந்தால் சந்தோஷம் தான். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து அடமானமே வெகுமானம் என நினைக்கப் போகிறார்களா? இல்லை அதிமுக தன்மானம் இனமானம் முக்கியம் என நினைக்கப் போகிறார்களா என விரைவில் தெரியும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!

Last Updated :Feb 2, 2023, 10:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.