ETV Bharat / state

தேவர் மகன் விவகாரம் - புரிதல் இல்லாதவரின் விமர்சனம் என பேரரசு கருத்து!

author img

By

Published : Jun 25, 2023, 3:54 PM IST

“மாமன்னன்” ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல் நடித்த “தேவர்‌மகன்” படத்தை விமர்சித்து மாரி செல்வராஜ் பேசியதைக் கண்டித்து அரங்கில் இருந்த கமல்ஹாசன் ஒரு வார்த்தை கூட பேசமல் அரசியல்வாதியாக இருந்துவிட்டார் என இயக்குநர் பேரரசு கருத்து தெரிவித்து உள்ளார்.

தேவர் மகன் விவகாரம் - புரிதல் இல்லாதவரின் விமர்சனம் என பேரரசு கருத்து!
தேவர் மகன் விவகாரம் - புரிதல் இல்லாதவரின் விமர்சனம் என பேரரசு கருத்து!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் "மாமன்னன்". இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ், கமல் நடித்த தேவர்‌மகன் படத்தை விமர்சித்துப் பேசினார். ஆனால் அரங்கில் இருந்த கமல்ஹாசன் இதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் மாரி செல்வராஜின் இந்த கருத்துக்கு எதிர் கருத்து நிலவி வருகிறது. ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் #TamilsPrideThevarmagan என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

மாரி செல்வராஜ் பேசியது தவறு என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில் இது குறித்து இயக்குநர் பேரரசு கருத்துத் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மாமன்னன் பாடல் வெளியீட்டு விழாவில் வாழ்த்த வந்த கமல்ஹாசனை இயக்குநர் மாரி செல்வராஜ் வசை பாடிவிட்டார் என்று இங்கே நிறைய கோப வீச்சுகள் பரவி வருகின்றன.

ஆனால், கமல்ஹாசன் அவர்களுக்கு இதில் எந்தவித வருத்தமும் இல்லை, கோபமும் இல்லை. அவரோட உரையில் அதற்கான பதில் எதுவும் இல்லை. மேலும் மாரி செல்வராஜை உயர்த்திப் பிடித்தே பேசினார். அது அவரோட பக்குவமாக இருக்கலாம்.

அந்த இயக்குநர் கமல்ஹாசன் என்ற நடிகரை குறை சொல்லவில்லை. தேவர் மகன் என்ற படைப்பைக் குறை கூறி இருந்தார். தான் நடித்த ஒரு படைப்பை குறிப்பாக தமிழகமே கொண்டாடிய ஒரு படைப்பை ஒருவர் குறை சொல்லும் பொழுது அதற்குப் பதில் அளிக்க வேண்டியது உலக நாயகனின் கடமை. கமல் அவர்களைக் குறை கூறும்போது, அதற்கு எந்தவித எதிர்வினையும் காட்டாதிருப்பது அவர் இஷ்டம்.

ஆனால், தான் நடித்த சிறப்பான படைப்பை ஒருவர் பொது மேடையில் குறை கூறும் பொழுது அதற்கான விளக்கத்தை அளித்திருக்க வேண்டியது ஒரு நல்ல கலைஞனின் கடமை. அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அவர்கள் ஒரு கலைஞனாக அல்ல, ஒரு அரசியல்வாதியாக இருந்துவிட்டார்'' எனக் கூறியுள்ளார்.

அரசியல் ஆதாயத்திற்காகவும், சினிமா வியாபாரத்திற்காகவும் தன் வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டதாகவும், நாட்டு மக்களில் பலர் ஒரு நல்ல படைப்புக்காக பொங்கி எழும்போது அந்தப் படைப்பால் ஆதாயம் பெற்ற ஒருவர் அமைதியாக இருந்தது வியப்பாக இருப்பதாக பேரரசு தெரிவித்துள்ளார்.

மேலும் தேவர்மகனை குறை கூறும் பொழுது அவருக்கு கோபம் வர வாய்ப்பு இல்லை என்றும்; ஏனென்றால் அவருக்கு அது ஒரு சினிமா, ஆனால் ரசிகர்களுக்கு அது ஒரு சிறந்த படைப்பு, அது ஒரு சமூகத்தின் பதிவு, எனவே மக்களே, கமலுக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டதே என்று யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும், ஒரு படைப்பு, புரிதல் இல்லாதவரின் விமர்சனத்திற்கு உள்ளாகிவிட்டதே என்று மட்டும் கவலைப்படுவோம் என்றும்; அதை புறம் தள்ளுவோம் என்றும் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: மழைக்காலத்துக்கு ஏற்ற உணவுகள் எவை? - ஊட்டச்சத்து நிபுணர்கள் அட்வைஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.