ETV Bharat / state

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் குணமடைந்தும் மருத்துவமனையிலே வாடும் அவலம்... நடவடிக்கைகோரி மனு!

author img

By

Published : May 20, 2022, 7:50 PM IST

மனநலப் பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்த பிறகும், கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் வாடுவதை தடுப்பது குறித்து தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்திற்கு அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் குணமடைந்தும் மருத்துவமனையிலே வாடும் அவலம்.. உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் குணமடைந்தும் மருத்துவமனையிலே வாடும் அவலம்.. உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

சென்னை: ஜெபமணி ஜனதா கட்சியின் பொதுச்செயலாளரான ஜெ.மோகன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், “சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் வருந்தத்தக்க நிலை குறித்து சமூக ஊடகங்களில் வெளியான செய்தியில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராசரிடம் நெருங்கி பழகியவரும், முன்னாள் தமிழ்நாடு அமைச்சருமான கக்கனின் மகன் நடராஜமூர்த்தி சங்கிலியால் பிணைக்கப்பட்டு நகர முடியாத நிலையில் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் இருக்கிறார் எனத் தெரியவந்தது.

மேலும், இங்கு 3000 நோயாளிகள் உள்ள நிலையில், சுமார் 500-க்கும் மேற்பட்ட நபர்கள் முழுமையாக குணமடைந்தாலும் இன்னும் மருத்துவமனையில் வாடுவதாக அந்த சமூக ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தின் தலைமைச்செயல் அலுவலருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நான் மனு அளித்தேன்.

ஆனால், இந்த மனு மீது தற்போது வரை எந்தப் பதிலும் வரவில்லை. எனவே, தான் அளித்த மனு மீது தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அமராவதி ஆற்றில் இருந்து நீர் எடுக்கத்தடை விதிக்க வேண்டும் - உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.