சென்னை: கொரட்டூர் வாட்டர் கேணல் சாலையில் செயல்பட்டு வரும் அழகு நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் 4 பேர் கடைக்குள் இருந்த ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டி அருகிலிருந்த அறையில் வைத்து பூட்டிவிட்டு, அங்கிருந்த பணம், எல்.இ.டி.டிவி, கணினி, மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்று இருக்கின்றனர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கு வாடிக்கையாளர் ஒருவர் வந்துள்ளார். அப்போது வெளிப்பக்கமாக பூட்டப்பட்ட அறையில் உள்ளே யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கதவைத் திறந்து விட்டுள்ளார்.
அப்போது உள்ளே இருந்து ஊழியர் வெளியே வந்து அங்கு நடந்ததைக் கூறியுள்ளார். இதனையடுத்து அழகு நிலையத்தின் உரிமையாளர் அருண்குமார், கொரட்டூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் புகார் அளித்த நிலையில், கொரட்டூர் தனிப்படை போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகளை கைப்பற்றி திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
இதையும் படிங்க: Vijay: நடிகர் விஜய் காருக்கு ரூ.500 அபராதம் விதிப்பு!
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் அந்த நபர்கள் தலைமறைவாக இருந்ததை தெரிந்து கொண்ட போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிராஜுதீன் (22), வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த வெள்ளவிஜய் (22), அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (21), பூபாலன் (23) என்பதும் தெரிய வந்தது.
இந்நிலையில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்கள் கொள்ளையடித்த எல்.இ.டி டிவி, கணினி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவம் கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்த நிலையில், அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் தெளிவாக இருந்தும், கொரட்டூர் போலீசாரின் மெத்தனப்போக்கால் சுமார் 15 நாட்கள் கழித்து குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர்.
கொரட்டூர் குற்றப்பிரிவு போலீசார் சரிவர ரோந்து பணியை செய்யாததால் கடந்த மாதத்தில் இருசக்கர வாகனம் திருட்டு, பட்டப்பகலில் கடையில் புகுந்து கொள்ளை எனப் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் வசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களே குறி! சென்னையில் கஞ்சா விற்ற 4 பேர் கைது