ETV Bharat / state

ஒலிம்பிக் போட்டியில் குத்துச் சண்டையில் பதக்கங்களை அதிகரிக்க சென்னை ஐஐடி முயற்சி

author img

By

Published : Aug 29, 2022, 4:14 PM IST

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் (IIS) உடன் இணைந்து, 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கச் செய்ய மேம்பட்ட குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி வருகின்றனர்.

பதக்கங்களை அதிகரிக்க சென்னை ஐஐடி முயற்சி
பதக்கங்களை அதிகரிக்க சென்னை ஐஐடி முயற்சி

சென்னை ஐஐடியின் விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான தனிச்சிறப்பு மையம் பல பதிப்புகளைக் கொண்ட 'ஸ்மார்ட்பாக்சர்' என்ற பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி உள்ளது. அணியக்கூடிய சென்சார்கள் மற்றும் வீடியோ கேமராக்களைப் பயன்படுத்தி இண்டர்நெட்-ஆஃப்-திங்ஸ் மூலம் பின்னூட்டம் மற்றும் செயல்திறன் மதிப்பீடுகளை இந்த பகுப்பாய்வுத் தளம் வழங்கும். இந்திய விளையாட்டு வீரர்களின் போட்டித் திறனை மேம்படுத்த இது உதவும்.

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் அமைந்துள்ள இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் 'ஸ்மார்ட்பாக்சர்' பயன்படுத்தப்பட்டு, குத்துச்சண்டை வீரர்களின் செயல்திறன் ஆய்வு செய்யப்படும். ஐஐஎஸ்-ல் இருந்து பெறப்படும் பின்னூட்டத்தின் அடிப்படையில், 'ஸ்மார்ட்பாக்சர்' பகுப்பாய்வுத் தளத்தில் மாற்றங்கள் இணைக்கப்படும். இதன்மூலம் பயிற்சியாளர்கள் மற்றும் குத்துச்சண்டை வீரர்களுக்கு உதவிடும் வகையில் இந்த மென்பொருளை திறம்படப் பயன்படுத்த முடியும்.

பதக்கங்களை அதிகரிக்க சென்னை ஐஐடி முயற்சி

விளையாட்டுப் பொறியியல் என்ற ஒப்பீட்டு அளவிலான புதிய துறைக்கு கணிதம், இயற்பியல், செயற்கை நுண்ணறிவு, இண்டர்நெட்- ஆஃப்-திங்ஸ் தொடர்புடன் அணியும் பொருட்கள் ஆகியவை இடைநிலைக் களமாக பயன்படுத்தப்படும். உடலியல், உயிர்இயக்கவியல் போன்ற விளையாட்டுடன் தொடர்பு உடையவற்றைப் புரிந்துகொள்ள விளையாட்டுப் பொறியியல் உதவிகரமாக இருக்கும். அத்துடன், விளையாடுவதில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்கவும், விளையாட்டு சாதனங்களை நன்கு வடிவமைக்கவும் இது உதவும்.

ஒலிம்பிக் பதக்கங்களை அதிகரித்தல்:

2024 ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை அதிகரிக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கை எட்டிப் பிடிக்க, வில்வித்தை, குத்துச்சண்டை, பேட்மிண்டன், மல்யுத்தம், ஹாக்கி, பளுதூக்குதல், சைக்கிள் பந்தயம், தடகளம் போன்ற விளையாட்டுகளில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இது குறித்து ஐஐடி மெட்ராஸ் ரசாயனப் பொறியியல் துறை இணை ஆசிரியரும், விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான தனிச்சிறப்பு மையத்தின் தலைவருமான ரங்கநாதன் ஸ்ரீனிவாசன் கூறும்போது, பயிற்சியாளருக்கும், உயர்நிலை விளையாட்டு வீரருக்கும் இடையே செயல்திறனை அடையாளம் காணவும், புரிந்து கொள்ளவும், ஆக்கபூர்வமாக மேம்படுத்தவும் தற்போது உருவாக்கப்பட்டு உள்ள தொழில்நுட்பம் பாலமாக செயல்படும்.

ஒலிம்பிக் போட்டிகளில் அதிகப் பதக்கங்களை வெல்லும் இந்திய அரசின் லட்சிய இலக்கை அடைய ஐஐடி மெட்ராஸ் மேற்கொண்டு இருக்கும் பல்வேறு முன்முயற்சிகளில் ஸ்மார்ட்பாக்சரும் ஒன்றாகும் என தெரிவித்தார்.

இந்த முறையில், பயன்படுத்தப்படும் இண்டர்நெட்-ஆப்-திங்ஸ் அடிப்படையில், பஞ்ச்-ன் வேகத்தை ஆய்வு செய்யும் வகையில் சென்சாருடன் கூடிய கையுறைகள், தரை வினை விசையைப் பதிவு செய்வதற்காக 'வயர்லெஸ் ஃபுட் இன்சோலுடன் கூடிய அழுத்தமானி, விளையாட்டு வீரர்கள் உடலின் கீழ்பகுதியில் இயக்கத்தைப் பதிவு செய்வதற்காக வயர்லெஸ் இ.எம்.ஜி. சென்சார்கள் , விளையாட்டு வீரர்கள் உடலின் மேல்பகுதியில் இயக்கத்தைப் பதிவு செய்வதற்காக இயக்கசக்தி அளவீட்டு அலகு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. குத்துச்சண்டை வளையத்தில் வைக்கப்படும் வீடியோ கேமராக்கள் வீரரின் இடது, வலது கைகளை அடையாளம் காண்பதுடன், தாக்குதல், தற்காப்பு, பாசாங்கு ஆகியவற்றை வகைப்படுத்தும்.

ஐஐஎஸ்-ல் சரிபார்க்கப்பட்ட பின், ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் ஐஐஎஸ்-உடன் இணைந்து ஸ்மார்ட்பாக்சர் காப்புரிமைக்காக விண்ணப்பிக்கத் திட்டமிட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: சிவகிரியில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.