ETV Bharat / state

கும்பகோணத்தில் போலி சிற்பங்களை வைத்துவிட்டு திருடப்பட்ட 4 சிலைகள், அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

author img

By

Published : Sep 8, 2022, 12:20 PM IST

கும்பகோணம் சௌந்தர்ராஜன் பெருமாள் கோயிலில் இருந்த 4 சிலைகளை திருடி விட்டு அதற்கு பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் சௌந்தர்ராஜன் கோயிலின் சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு
கும்பகோணம் சௌந்தர்ராஜன் கோயிலின் சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தர பெருமாள் கிராமத்தில் உள்ள சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் திருமங்கை ஆழ்வார் சிலை கோயிலில் இருந்து திருடப்பட்டு அவற்றுக்கு பதிலாக போலியான சிலை கோயிலில் வைக்கப்பட்டு இருப்பதாக 2020ஆம் ஆண்டு கோயிலின் செயல் அலுவலர் ராஜா போலீசாரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். புதுச்சேரியில் உள்ள இந்தோ பிரஞ்ச் நிறுவனத்திடம் புகைப்படங்களை பெற்று விசாரணையை தொடங்கினர். அப்போது 1967ஆம் ஆண்டு ஏலத்தில் ஜே.ஆர் பெல்மாண்ட் என்பவரிடமிருந்து 850 டாலர் கொடுத்து லண்டனில் உள்ள அஷ்மோலியன் அருங்காட்சியகம் சிலையை வாங்கியது தெரியவந்தது.

மேலும் கோயிலில் உள்ள திருமங்கையாழ்வார் சிலை போலியானது எனவும், கோயிலில் உள்ள உண்மையான சிலை திருடப்பட்டு, லண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பதை கடந்த 6 மாதத்திற்கு முன் கண்டுபிடித்தனர். இதன் பிறகு சந்தேகம் அடைந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கோயிலில் உள்ள அனைத்து சிலைகளையுமே சோதனை நடத்திய போது காளிங்க நார்த்தன் கிருஷ்ணன், விஷ்ணு, ஸ்ரீதேவி ஆகிய மூன்று பழங்கால சிலைகளும் கோயிலில் இருந்து திருடப்பட்டு அவற்றுக்கு பதிலாக போலியான சிலை வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

அதன்பின் அமெரிக்காவின் சான்பரான்சிஸ்கோவில் உள்ள ஆசிய சிலை அருங்காட்சியகத்தில் காளிங்கநார்த்தன் கிருஷ்ணன் சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விஷ்ணு சிலை, கிம்பல் அருங்காட்சியகம் டெக்ஸாஸ் அமெரிக்காவில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்ரீதேவி சிலை ஃப்ளோரிடாவில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சிலைகள் அனைத்துமே 13ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த சிலைகள் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். உள்துறை அமைச்சகத்தின் மூலமாக அமெரிக்கா மற்றும் லண்டனில் இருந்து இந்த சிலைகளை இந்தியாவுக்கு கொண்டுவர முயற்சிகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கில் செப்டம்பர் 13ஆம் தேதி உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.