ETV Bharat / state

அனைத்து வழக்குகளும் காணொலி மூலம் விசாரிப்பு: சென்னை உயர் நீதிமன்றம்

author img

By

Published : Jul 4, 2020, 1:54 PM IST

சென்னை: அனைத்து நீதிபதிகளும், ஜூலை 6ஆம் தேதி முதல் காணொலி காட்சி மூலம், புதிய மற்றும் நிலுவை வழக்குகளை விசாரிக்க உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

கரோனா பரவலை தடுக்க மார்ச் 25ஆம் தேதி முதல், நாடு முழுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் மூடப்பட்டு, அவசர வழக்குகள் மட்டும் காணொலி காட்சி மூலமாக விசாரிக்கப்பட்டன.
இரு நீதிபதிகள் அடங்கிய இரண்டு அமர்வுகள், பொது நல வழக்குகள், ஆட்கொணர்வு வழக்குகளை விசாரித்தன. அதேபோல நான்கு தனி நீதிபதிகள், ஜாமீன், முன் ஜாமீன், பொது வழக்குகளையும் விசாரித்து வந்தனர்.
இதற்கிடையில், நீதிமன்ற விசாரணையை தொடங்கிய போது, நீதிபதிகளுக்கும், ஊழியர்களுக்கும் கரோனா தொற்று பரவியதை அடுத்து, மீண்டும் காணொலி காட்சி மூலம் வழக்குகள் விசாரணை தொடங்கியது.
நீதிபதிகள், தங்கள் வீடுகளில் இருந்தும், வழக்குரைஞர்கள் தங்கள் வீடுகள், அலுவலகங்களில் இருந்தும், சில நேரங்களில் சில வழக்கறிஞர்கள், தங்கள் வாகனங்களில் இருந்தும் விசாரணையில் ஆஜராகி வந்தனர்.
இந்தக் காணொலி காட்சி விசாரணையின் போது, இடையூறுகள், தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, திறமையாக தங்கள் வாதங்களை முன் வைக்க முடியவில்லை என வழக்குரைஞர்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.
தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில், நீதிமன்றங்களை திறந்து, உயர்தீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள் சங்கம் ஜூலை 6ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்து, அனைத்து நீதிபதிகள் கூட்டத்தை கூட்டி, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில், ஜூலை 6 முதல் அனைத்து நீதிபதிகளும், புதிய மற்றும் நிலுவை வழக்குகளையும் விசாரிப்பது எனவும், காணொலி காட்சி மூலம் மட்டும் வழக்குகளை விசாரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, இரு நீதிபதிகள் அடங்கிய ஆறு அமர்வுகளும், 27 தனி நீதிபதிகளும், ஜூலை 6 முதல் வழக்கமான நடைமுறைப்படி வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.
இதேபோல மதுரைக் கிளையில், இரு நீதிபதிகள் அமர்வு இரண்டும், ஒன்பது தனி நீதிபதிகளும் வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.
கரோனா ஊரடங்கு காலத்தில் அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூலை 6ஆம் தேதி முதல் புதிய வழக்குகள், பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ள வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது என நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மலையாய் குவிந்துகிடக்கும் தேங்காய்கள்; இப்போ நட்ட பிள்ளயும் சோறு போடல' - வேதனைப்படும் தென்னை விவசாயிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.