ETV Bharat / state

Chennai High Court: ராஜேந்திர பாலாஜியை கைது செய்யக்கூடாது என உத்தரவு

author img

By

Published : Nov 19, 2021, 6:36 PM IST

ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கைது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Former minister rajendra balaji  case against rajendra balaji  rajendra balaji  chennai high court  money laundering  high court ordered not to arrest rajendra balaji  அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  ராஜேந்திர பாலாஜி  ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்குகள்  சென்னை உயர் நீதிமன்றம்
ராஜேந்திர பாலாஜி

சென்னை: ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில், தமிழ்நாடு பால்வளத்துறை, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கில், தங்களுக்கு எதிராக புகார் அளித்த நல்லத்தம்பி மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி தொடர்பாக பல புகார்கள் உள்ளதாகவும், தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட பொய் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜாமீன் வழங்க எதிர்ப்பு

இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, வேலைக்காக பணம் வாங்கியது தவிர, கொலை திட்டத்திலும் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் 11 பேர் மோசடிக்கு உள்ளாக்கியுள்ளதாகவும், வேலை வாங்கி தருவதாக மோசடி மட்டுமல்லாமல், ராஜவர்மன் என்பவரை கொலை செய்ய முன்னாள் அமைச்சர் திட்டமிட்டதும், இவ்வழக்கு தொடர்பான புகார்களில் இருந்து தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இரு வழக்கிலும் முன் ஜாமீன் வழங்கக்கூடாது என புகார்தாரர்களான விஜயநல்லதம்பி மற்றும் ரவீந்திரன் தரப்பில், ராஜேந்திர பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்தனர்.

விசாரணை ஒத்திவைப்பு

இதனைத் தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜராகி, புகார் அளித்த விஜய் நல்லத்தம்பியின் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும் எனவும், காவல்துறை உரிய நோட்டீஸ் வழங்காமல், கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் பாதுகாப்பு வழங்க வேண்டுன் என்றும் கோரிக்கை வைத்தார்.

மேலும் அரசியல் உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவுசெய்யப்பட்டதாக குறிப்பிட்டார். உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த விஜய நல்லதம்பியை அரசுத்தரப்பு பயன்படுத்தி வருவதாகவும், அவர் அனைத்து கட்சிகளிலும் அங்கம் வகித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய அனுமதியளித்த நீதிபதி, புலன் விசாரணையை தொடரலாம் எனவும், ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கைது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்க கூடாது என உத்தரவிட்டு, முன் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: 'போராட்டத்தில் உயிரிழந்த உழவருக்கு ஒன்றிய அரசு இழப்பீடு தர வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.