ETV Bharat / state

"டிடிவி தினகரன், ஓபிஎஸ் இணைவதால் அதிமுகவிற்குப் பாதிப்பில்லை" - ஜெயக்குமார்!

author img

By

Published : May 9, 2023, 8:45 PM IST

டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இணைவதால் அதிமுகவிற்கு எந்த விதமான பாதிப்பும் கிடையாது என அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

PRESSMEET
டிடிவி தினகரன்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று(மே.8) நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அதிமுகவை மீட்க இருவரும் இணைந்து செயல்படவுள்ளதாக தெரிவித்தனர். தமிழக அரசியலில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுகவின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் நிகழ்ச்சி இன்று சென்னை ராயபுரத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பின்னர், அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரின் சந்திப்பை கவுண்டமணி, செந்தில் சந்தித்தால் எப்படி காமெடியாக இருக்குமோ, அப்படித்தான் மக்கள் பார்ப்பார்கள். இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதால் அதிமுகவிற்குப் பாதிப்பு கிடையாது. டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு என்பது இரண்டு அமாவாசைகள் சந்திப்பது போன்றது.

2017ஆம் ஆண்டு சசிகலா குடும்பத்தை எதிர்த்து, ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார். சசிகலா சிறை சென்ற போது மீண்டும் அவரை அதிமுகவில் இணைத்து ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கினோம். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, ஓபிஎஸ் அழுத்தத்தால் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் விசாரணைக்காக பலமுறை ஓபிஎஸ்ஸிற்கு சம்மன் அனுப்பியும், அவர் அதில் ஆஜராகவில்லை. இறுதியில் ஜெயலலிதாவின் மரணத்தில் தனக்கு சந்தேகம் இல்லை எனவும், மக்களுக்கு சந்தேகம் இருந்ததாகவும் கூறினார்.

எந்த குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினாரோ, அதே குடும்பத்துடன் தற்போது கைகோர்த்துள்ளார். எந்த இடத்திலும் நம்பிக்கையில்லாமல் செயல்பட்டதால் ஓபிஎஸ் ஒரு துரோகி. எந்த காலத்திலும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை கட்சியில் சேர்க்க மாட்டோம்.

ஓபிஎஸ் உடன் இருக்கும் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெசிடி பிரபாகரன் ஆகியோர் அதிருப்தியில் உள்ளனர். இவர்கள் விருப்பப்பட்டால் கட்சியில் இணைக்கும் முடிவை பொதுச்செயலாளர் எடுப்பார். இவர்களின் சந்திப்பு இரண்டு நாள் பேசப்படும், அதற்கு பின்னர் இருவருக்குள் யார் தலைவர் என்ற போட்டி வந்துவிடும்" என்று கூறினார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து பேசிய ஜெயக்குமார், "திமுக ஒரு தீய சக்தி என எங்களுடைய தலைவர்கள் எங்களை வழிநடத்தினார்கள். ஆனால், தற்போது திமுகவுடன் மறைமுகமாக ஓபிஎஸ் கைகோர்த்துக் கொண்டார். கடலில் தொழில் தொடங்குவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தி இருக்கலாம். கருணாநிதியின் புகழ் பாடுவது, ஓபிஎஸ் அவரது மகனை அனுப்பி முதலமைச்சரை சந்திக்க வைப்பது போன்ற நிகழ்வுகளை அதிமுக தொண்டர்கள் ரசிக்க மாட்டார்கள். எந்த காலத்திலும் ஓபிஎஸ்-ஐ ஏற்க முடியாது" என்று கூறினார்.

ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை அதிமுகவில் இணைக்க பாஜக அழுத்தம் கொடுத்தால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், "பாஜகவில் முக்கியத் தலைவர்களின் ஒருவராக இருக்கக்கூடிய அமித் ஷா, அதிமுக உட்கட்சி விவகாரங்களில் தலையீடு இல்லை என்று கூறியுள்ளார். எங்களுடைய எதிரிகளான ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் பாஜக கூட்டணி அமைத்தால் நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? உள்ஒதுக்கீடு என்ற முறையில் இவர்களை சேர்க்க பாஜக முயற்சி செய்யாது" என கூறினார்.

இதையும் படிங்க: இரு அணியினரும் இணைந்து செயல்பட முடிவு; ஓபிஎஸ் - டிடிவி தினகரன் கூட்டாகப் பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.