ETV Bharat / state

கேடில் விழுச்செல்வம் கல்வி - சாதித்த ஏழை மாணவியின் குடும்பம் தங்க ராஜ்பவனில் திறக்கப்பட்ட விருந்தினர் மாளிகை!

author img

By

Published : May 10, 2023, 6:22 PM IST

Updated : May 11, 2023, 9:44 AM IST

தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக நல்ல மதிப்பெண்கள் எடுத்த ஏழை மாணவி ஷப்ரீன் இமானாவின் குடும்பம் ராஜ்பவனில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டனர்.

Etv Bharat
Etv Bharat

ஏழை மாணவியின் குடும்பம் தங்க ராஜ்பவனில் திறக்கப்பட்ட விருந்தினர் மாளிகை

சென்னை: ஜனாதிபதி, பிரதமர் போன்ற முக்கியப் பிரமுகர்களுக்காக மட்டுமே திறக்கப்படும் தமிழக ராஜ்பவன் விருந்தினர் மாளிகையில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக இன்று (மே.10) ஒரு ஏழை மாணவியின் குடும்பம் தங்குவதற்காக திறக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 8ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி வழக்கம்போல, மாணவிகளே அதிக விழுக்காட்டில் தேர்ச்சி பெற்று சாதனையாளர்களாக அறியப்பட்டுள்ளனர். மாநில அளவில் முதல் இடம் (600-க்கு 600 மதிப்பெண்) பெற்ற திண்டுக்கல், அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி (Dindigul Student Nandhini) நேற்று முன்தினம் சென்னை வந்தார். நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து அவர் வாழ்த்துப் பெற்றார். பின்னர், அவரின் உயர்கல்விக்கு ஆகும் செலவை அரசே ஏற்கும் என்று நந்தினியை உற்சாகப்படுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் ரேங்க் பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரையும் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்தார். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்காக தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இருந்து மாணவி ஷப்ரீன் இமானா பெற்றோருடன் சென்னை வந்தார். அவர், ராஜ்பவனில் ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிக முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டார்.

விதிமுறைப்படி இங்கே தனி நபர்கள் தங்குவதற்கு அனுமதியில்லை என்று ராஜ்பவன் அதிகாரிகள், ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவர்களிடம் பேசிய ஆளுநர், ''மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் ரேங்க் பெற்ற மாணவி ஷப்ரீன் இமானா ஒரு ஏழை கூலித் தொழிலாளியின் குடும்பம். தமிழ் வழியில் கல்வியில் பயின்று சாதனைப் படைத்துள்ளார். அவருக்காக விதிமுறைகளை தளர்த்துவதில் தவறே இல்லை'' என்று ஆளுநர் உறுதிபடத் தெரிவித்த பிறகே, மாணவி ஷப்ரீன் இமானா குடும்பத்துக்காக ராஜ்பவனில் உள்ள விருந்தினர் மாளிகை திறக்கப்பட்டுள்ளது.

மாணவி ஷப்ரீன் இமானா குறித்து கடையநல்லுார் ஹிதாயத்துல் இஸ்லாம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆமீன் கூறிய போது, "எங்களது தொடக்கப் பள்ளி 99 ஆண்டுகளைக் கடந்து 100 ஆண்டை நோக்கி பயணிக்கிறது. மாணவி ஷப்ரீன் இமானா, எங்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 590 மார்க் பெற்றுள்ளார். மேலும், தமிழ் வழியில் கல்வி பயின்று மாநில அளவில் முதலிடமும், ஒட்டு மொத்த அளவில் மாநிலத்தில் 3ஆம் இடமும் பெற்றுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் தமிழ் வழியில் முதல் ரேங்க் பெற்றுள்ளதுடன், முதல் குரூப்பில் பயின்று முதல் இடம் பெற்றவரும் இவரே ஆவார். இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண்களும், கணிதத்தில் 99, ஆங்கிலத்தில் 96, தமிழில் 95 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். ராஜ்பவனில் இருந்து, நேற்று (மே.9) பிற்பகலில், ஆளுநருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு மாணவி ஷப்ரீன் இமானாவை பெற்றோருடன் சேர்ந்து சென்னைக்கு அனுப்பி வையுங்கள் என்று தகவல் வந்தது.

பின்னர், அவர்களது குடும்பம் ஏழ்மையான குடும்பம். கூலித் தொழிலாளியான அவரை எப்படி உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைப்பது என்று நாங்கள் யோசிப்பதற்கு முன்பே, 'மாணவியின் போக்குவரத்து செலவை ராஜ்பவனே ஏற்றுக் கொள்ளும். நீங்கள் கவலைப்பட வேண்டாம்' என்றனர். உடனே, கார் பிடித்து மாலை 6 மணிக்கு அனுப்பி வைத்தோம். மாணவியின் தந்தை சிந்தாமதார் கூலித் தொழிலாளி. முதுகெலும்பு பிரச்னையால் வீட்டில் படுக்கையில் உள்ளார்.

எனவே, மாணவியுடன் அவரது தாய் சிராஜினிகா, மாமா அகமது அப்சல் ஆகியோர் காரில் இன்று காலை 7 மணிக்கு ராஜ்பவன் வந்து சேர்ந்தாகவும், அங்கேயே அவர்களுக்கு தங்குவதற்கு தயாராக ரூம் கொடுத்துள்ளதாகவும் கூறியிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது'' என்றார்.

இதையும் படிங்க: கலை அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பிப்பது எப்படி? - வழிமுறைகள் இதோ!

Last Updated :May 11, 2023, 9:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.