ETV Bharat / state

பி.இ.,பி.டெக் படிப்புகளுக்கான முதல் கலந்தாய்வின் முடிவுகள் வெளியீடு: 193 கல்லூரியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்!

author img

By

Published : Aug 9, 2023, 6:19 PM IST

Updated : Aug 9, 2023, 9:49 PM IST

பி.இ. மற்றும் பி.டெக் பொறியியல் படிப்புகளுக்கான முதல் சுற்றில், 442 பொறியியல் கல்லூரிகளில் 193 கல்லூரியில் ஒரு மாணவர் கூட சேராதது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிஇ,பிடெக் படிப்புகளுக்கான முதல் கலந்தாய்வின் முடிவுகள் வெளியீடு
பிஇ,பிடெக் படிப்புகளுக்கான முதல் கலந்தாய்வின் முடிவுகள் வெளியீடு

கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி பிரத்யேகப்பேட்டி

சென்னை: பி.இ., பி.டெக் பொறியியல் படிப்பில் முதல்சுற்றுக் கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், எப்போதும் இல்லாத வகையில் தற்போது, 193 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒரு மாணவரும் சேராத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பொறியியல் படிப்பில் கம்ப்யூட்டர் தொடர்பான பாடப்பிரிவுகளை மாணவர்கள் அதிகளவில் தேர்வு செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 442 பொறியியல் கல்லூரிகள் இருக்கும் பட்சத்தில், தற்போது வரை 20 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவிகிதத்திற்கும் அதிகமான இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்விற்கு கடந்த மே மாதம் 5ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 4ஆம் தேதி வரையில் விண்ணப்பம் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் 3 சுற்றுகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பொதுக் கலந்தாய்வு ஜூலை மாதம் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்விற்கு இதுவரையில் 442 கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்து 19 ஆயிரத்து 346 இடங்களில், ஒற்றைச் சாளர முறையில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 783 மாணவர்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட உள்ளனர்.

அதேபோல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் 12 ஆயிரத்து 59 இடங்களும், தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு 3 ஆயிரத்து 143 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு 1 லட்சத்து 76 ஆயிரத்து 744 மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவினருக்கான விளையாட்டுப் பிரிவில் 385 மாணவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 163 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 137 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதல் கட்ட பொது கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி தொடங்கி ஜூலை 30ஆம் தேதி வரையில், மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளைப் பதிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

முதல் சுற்றுக் கலந்தாய்வின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில் 16 ஆயிரத்து 64 மாணவர்கள், அவர்கள் விரும்பும் இடங்களை தேர்வுசெய்துள்ளனர். தற்போது முதற்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், காரைக்குடி சிஇசிஆர்ஐ, எஸ்எஸ்என், அண்ணா பல்கலைக் கழகத்தின் எம்ஐடி, கிண்டிப் பொறியியல் கல்லூரி, சிஐடி, கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம், தியாகராஜர் பொறியியல் கல்லூரி, பி.எஸ்சி, சென்னை இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலாஜி அண்டு அப்ளைடு ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட 20 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மற்ற கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்யாத நிலையில் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி கூறியதாவது, "பொறியியல் படிப்பில் மாணவர்களுக்கான முதல்சுற்றுக் கலந்தாய்வில் 9.80 சதவீதம் இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளது. அடுத்துள்ள 2 மற்றும் 3ஆம் சுற்றுக் கலந்தாய்வில் அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும்.

இந்தாண்டும் கலந்தாய்வின் முடிவில் 50 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும். 442 கல்லூரிகளில் 193 கல்லூரியில் ஒரு மாணவரும் சேரவில்லை. 28 கல்லூரிகளில் மட்டுமே 40 சதவீதம் இடங்கள் நிரம்பி உள்ளன. கட் ஆஃப் மதிப்பெண்களில் 200க்கு 200 பெற்ற 80 மாணவர்களில் 42 பேர் கம்ப்யூட்டர் தொடர்புடைய பாடங்களை அதிகளவில் தேர்வுசெய்துள்ளனர்.

பொறியியல் படிப்பில் அதிகளவில் மாணவர்கள் சேர்ந்த கல்லூரிகளில் அண்ணாப் பல்கலைக் கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியும், அரசு உதவி பெறும் கல்லூரியில் பி.எஸ்சி டெக், மற்றும் தனியார் கல்லூரியில் ராஜலட்சுமி கல்லூரியில் அதிகளவில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் துறைகளில் மாணவர்கள் சேர்வதற்கு அதிக ஆர்வம் காட்டவில்லை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தலைசிறந்த கல்வெட்டு ஆய்வு அறிஞரான புலவர் செ.ராசு காலமானார்!

Last Updated :Aug 9, 2023, 9:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.