ETV Bharat / state

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பயங்கர தீ விபத்து... பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 10:38 AM IST

Ambattur fire accident : சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக தகவல் வெளியாகி உள்ளது.

Ambattur fire accident
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பயங்கர தீ விபத்து

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பயங்கர தீ விபத்து

சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் காமாக்‌ஷி மேலிபேக் பிரைவேட் லிமிடெட் என்னும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அதில் பல்வேறு பிளாஸ்டிக், பாலித்தீன் உள்ளிட்ட பேக்கிங் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் தொழிற்சாலையில் ஊழியர்கள் பணி செய்து கொண்டிருந்த போது, திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொழிற்சாலையில் பாலித்தீன் பொருள்கள் வைத்து ரோல் டைப் டன் கணக்கில் உற்பத்தி செய்து ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டு இருந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தீ அருகில் கெமிக்கல் வைக்கபட்டு இருந்த பகுதிக்கு பரவியதால், மளமளவென எரிய துவங்கியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அம்பத்தூர் தொழிற்பேட்டை, செங்குன்றம், தண்டையார்பேட்டை, ஜே.ஜே நகர், ஆவடி, மாதவரம், வில்லிவாக்கம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, கட்டுக்கடங்காமல் பரவிய தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

மேலும் கெமிக்கல் பேரல்கள் வைக்கப்பட்ட கிடங்கில் அனைத்தும் வெடித்துச் சிதறியதால் அருகில் சென்று தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறினர். தொடர்ந்து சென்னையில் இருந்து ரோபோ ஸ்கைப் லிப்ட் என்ற அதிநவீன இயந்திரங்களுடன் கூடிய வாகனம் வரவழைக்கப்பட்டு விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணி முடுக்கி விடப்பட்டது.

மேலும் தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலை அருகில், அதிநவீன உயர்மின் கோபுரம் இருப்பதால், பாதுகாப்பு கருதி சுமார் 6 மணி நேரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் விபத்து ஏற்பட்ட இடம் பிரதான சாலை என்பதால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படாத வண்ணம் மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

தொடர்ந்து போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் தீக்காயங்களோ அல்லது உயிர் சேதங்களோ ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மூலப்பொருட்கள், ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

முழு விவரங்கள் தீயை கட்டுப்படுத்திய பின்னர் தான் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து அம்பத்தூர் தொழில்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் தீயணைப்புத்துறை கூடுதல் இயக்குனர் பிரியா ஐபிஎஸ் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் தொழிற்சாலையில் ஏற்படுத்தப்பட்டிருந்த தீ தடுப்பு உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆந்திர ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு! விபத்து நேரிட்டது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.