ETV Bharat / state

ஐபிஎஸ் தேர்வில் வெற்றி முதல் வேளாண் புரட்சியின் தந்தை வரை.. எம்.எஸ்.சுவாமிநாதன் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 1:49 PM IST

Updated : Sep 28, 2023, 7:08 PM IST

MS Swaminathan History: இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 98. கும்பகோணத்தில் பிறந்த மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன் கடந்த வந்த பாதையை பார்க்கலாம்

எம் எஸ் சுவாமிநாதன் சாதனைகள்
எம் எஸ் சுவாமிநாதன் சாதனைகள்

எம் எஸ் சுவாமிநாதன் கடந்து வந்த பாதை

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் 1925-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி பிறந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன். இவரது முழுப்பெயர் மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன் அதன் சுருக்கமே எம்.எஸ்.சுவாமிநாதன் என்று அழைக்கிறோம். கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை முடித்ததும், திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.

சுவாமிநாதனின் தந்தை மருத்துவர் என்பதால் இவரும் மருத்துவராகி, தந்தையின் மருத்துவமனையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது பெற்றோரின் ஆசை, ஆனால், வங்கத்தில் 1942-ல் ஏற்பட்ட பஞ்சம் சுவாமிநாதனை வெகுவாக பாதித்தது. அதனால் வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தார்.

கோயம்புத்தூர் வேளாண் கல்லூரியில் இளநிலைப் பட்டமும், டெல்லியில் மரபணு பயிர்கள் குறித்த முதுநிலைப் பட்டமும் பெற்றார். ஐபிஎஸ் அதிகாரியாக 1948-ல் தேர்வானார். ஆனால், பணியில் சேரவில்லை. பல ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சிறந்த ஆராய்ச்சியாளரான இவர், நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்களை எழுதியுள்ளார்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தும், 1954-ல் நாடு திரும்பினார். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் வேளாண் துறையில் அரசுப் பணி கிடைத்தது. 1960-களில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது அமெரிக்காவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது.

இந்தியர்களால் உணவு உற்பத்தி செய்ய முடியாது. பசியால் கொத்துக் கொத்தாக உயிரிழப்பார்கள் என்று பல நாடுகள் கூறின. இந்த விவகாரத்தை பொறுத்துக்கொள்ள முடியாத எம்.எஸ்.சுவாமிநாதன், ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, அதிக உற்பத்தியையும், 200 சதவீத லாபத்தையும் சாதித்துக் காட்டினார்.

இதை 'கோதுமைப் புரட்சி' என்று பாராட்டினார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. சீன நெல் வகைகளை அறிமுகம் செய்து நெல் விளைச்சலிலும் இந்தியாவை தன்னிறைவு பெறவைத்து, நாட்டின் முதுகெலும்பான வேளாண் துறையில் அபரிமித வளர்ச்சியை ஏற்படுத்தி உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

இந்தியா, உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலை மாறி, வேளாண் உற்பத்தி பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கி காட்டியதில் இவரது பங்கு அளப்பறியது. 'பட்டினி இல்லாத இந்தியாதான் என் கனவு' எனக் கூறி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையை 1988-ல் நிறுவினார்.

இந்தியாவிலும் உலக அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி, தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார். மத்திய வேளாண்மைத் துறைச் செயலாளர், மத்திய திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவர்.

வேளாண் புரட்சியில் அளப்பறிய சாதனைகளை புரிந்த இவர், உலகம் முழுவதும் 38 பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் 'வால்வோ' விருது, ராமன் மகசேசே விருது, பத்ம விபூஷன் விருது உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளுக்கு சொந்தக்காரரான இவர் தனது 90 வயதிலும் சுறுசுறுப்புடன் வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். அவருக்கு நாட்டு மக்களுடன் இணைந்து ஈடிவி பாரத் தமிழ்நாடு அஞ்சலி செலுத்துகிறது.

இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு அமெரிக்க டாலர்கள் கடத்தல் முயற்சி! வசமாக சிக்கிக் கொண்ட கடத்தல் குருவி!

Last Updated : Sep 28, 2023, 7:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.