ETV Bharat / state

ஆளுநர் வெளிநடப்பு சம்பவம்: ராஜ்பவன் அளித்த விளக்கம் என்ன?

author img

By

Published : Jan 9, 2023, 5:09 PM IST

Updated : Jan 9, 2023, 6:18 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரையின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஆளுநர் மாளிகைத் தரப்பில் தெளிவுப்படுத்தி அறிக்கை வெளியாகியுள்ளது.

ஆளுநர் வெளிநடப்பு சம்பவம்: ராஜ்பவன் விளக்கம் என்ன?
ஆளுநர் வெளிநடப்பு சம்பவம்: ராஜ்பவன் விளக்கம் என்ன?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கடந்த 27-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். மேலும் அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் ஆளுநர் பேசவேண்டிய உரையை தயாரித்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆளுநரிடம் சட்டப்பேரவையின் மரபுகள் குறித்தும், சட்டப்பேரவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்போது ஆளுநர் தனது உரையில் சிலவற்றை நீக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இன்று(09.01.2023) தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023ஆம் ஆண்டிற்கான உரையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்தார். அப்போது சில வார்த்தைகளை நீக்கி விட்டு ஆங்கிலத்தில் தொடர்ந்து உரை நிகழ்த்தினார்.

அச்சிடப்பட்ட உரையில் சில வார்த்தைகளை ஆளுநர் படிக்கத் தவறியதால், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட உரையை சட்டப்பேரவையின் அவைக்குறிப்பில் பதிவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவை முடியும் முன்னர் தீர்மானம் கொண்டு வந்தார். இதனால், ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போதே வெளியே சென்றார்.

இது குறித்து ஆளுநர் மாளிகை வட்டாரங்களில் கூறும்போது, "ஆளுநரின் உரையை நீக்குகிறேன் என்ற பெயரில் அவர் அழகாக தமிழில் மேற்கோள் காட்டிய ஔவையாரின் 'வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்' என்கிற வரிகளையும், பாரதியாரின் வாழிய பாரத மணித்திரு நாடு என்கிற கவிதை வரிகளையும், நாட்டு மக்களுக்கு ஆளுநர் தமிழில் சொன்ன ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகளையும் நீக்கியுள்ளனர்.

ஆளுநர் உரையை ஜனவரி 6 அன்று அரசு அனுப்பி வைத்தது. அதில் உள்ள ஆட்சேபகரமான விஷயங்களை குறிப்பிட்டு கேட்டு அவைகளை நீக்கச் சொல்லி சொன்னபோது அச்சுக்கு போய்விட்டது, நீங்கள் பேசும்போது தவிர்த்து பேசுங்கள் என்று சொல்லியுள்ளனர். (அந்த விவரமும் ஆவணபூர்வமாக பதிவாகியுள்ளது). ஆனால், ஆளுநர் சபையில் அதை நீக்கி வாசித்தபோது உடனடியாக ஊடகங்களுக்கு அதை அனுப்பி வைத்தும், ஆளுநர் இருக்கும்போதே ஆளுநர் உரைக்குப்பின் சபை முடித்து வைக்கப்பட வேண்டும் என்கிற சபை மரபை மீறி, தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஆளுநர் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்".

எதை எதை ஆளுநர் ஆட்சேபித்தார்? ஏன்?: ''ஜனவரி 12ஆம் தேதி சுவாமி விவேகானந்தரை நினைவுகூரும் தினம், இளைஞர் தினம். அந்த தினத்தைக் குறிப்பிட்டு சேர்த்து பேசியுள்ளார். இது அவை மரபை மீறிய செயல் அல்ல. ஆளுநர் ஆட்சேபித்த மற்றும் தவிர்க்கப்பட்ட பகுதிகள் அரசாங்கத்தைப் கண்டபடி பெரிதும் புகழ்ந்த பகுதிகள். நடைமுறை வேறாக இருந்ததால் ஆட்சேபித்தார். பேசும்போது தவிர்க்கலாம் என்று சொன்னதால் தவிர்த்தார்.

'வீரம் மற்றும் வீரியம் கொண்ட திராவிட மாடல் ஆட்சி தொடரும்' என்பதை இதை ஆளுநர் சொல்ல முடியாது. முதலமைச்சர் அவர் உரையில் பேச வேண்டியது. கொள்கைப்படி செய்ய வேண்டியதை மட்டும் ஆளுநர் உரையில் வைப்பார்கள். இதுபோன்ற அதீத புகழ்ச்சிகளை தவிர்ப்பேன் என்று ஆளுநர் சொல்லிவிட்டார்.

இந்த மாநிலம் அமைதி மற்றும் அமைதியின் சொர்க்கமாகத் தொடர்கிறது, வன்முறையிலிருந்து விடுபட்டுள்ளது என்று இல்லாத ஒன்றைப் பதிய வைப்பதை தவிர்த்தார். தினசரி நியூஸ் சேனல்கள், பேப்பர்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை அடுக்கடுக்காக புகாராக சொல்லும்போது, இந்த மாநிலம் அமைதியின் சொர்க்கமாக இருக்கிறது என்பது யதார்த்தம் அல்ல. (சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு நடந்த பாலியல் சீண்டலில் குற்றவாளிகளை கைது செய்யாமல் பாதுகாத்ததும், பின்னர் எதிர்ப்பு கிளம்பியபின் கைது செய்ததும் நடந்தது).

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஏதோ மாநில அரசின் முயற்சியால் மட்டுமே விடுவிக்கப்பட்டதாக உள்ள வரிகளை எப்படி ஏற்க முடியும். அது சர்வதேச பிரச்னை. மத்திய அரசின் தலையீடு இல்லாமல் எப்படி நடக்க முடியும் என்பதால் ஒன்றிய அரசின் முயற்சி என்கிற வார்த்தையை சேர்த்து படித்தது தவறா?

பல இடங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் அமைதியின் சொர்க்கமாக மாநிலம் திகழ்கிறது என்கிற வார்த்தைகள் முதலமைச்சர் மற்றும் டிஜிபியை போற்றும் வகையில் இருந்தது. இந்த வார்த்தைகள் ஆளுநரால் தவிர்க்கப்பட்டது. தொழில்முதலீடு குறித்த மிகைப்படுத்தப்பட்ட செய்தி கடந்த 1.5 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிக அந்நிய நேரடி முதலீட்டை தமிழ்நாடு ஈர்த்தது என்பது ஜனவரி 7ஆம் தேதி ஆளுநர் உரையில் இருந்தது. இதை ஆளுநர் சுட்டிக்காட்டி மாற்றச்சொன்னார், ஆனால் அது அப்படியே இருந்ததால் தவிர்த்தார்.

உண்மை என்ன?: கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு ஈர்த்த அந்நிய முதலீடு - 2.5 பில்லியன் டாலர்கள் என பெருமையாக பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் மகாராஷ்டிரா - 28 பில்லியன் டாலர்கள் மற்றும் கர்நாடகா - 25 பில்லியன் டாலர்கள் என அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ளது.

இதில் பத்தில் ஒருபங்கை ஈர்த்துவிட்டு பெருமையடைவது பிழையான ஒன்று என்பதால் தவிர்த்தார். சட்டசபை உறுப்பினர்கள் ஆளுநரை சுற்றி நின்று உரையை வாசிக்கவிடாமல் கோஷமிட்டு களேபரம் செய்தனர். இது இதற்கு முன் நடக்காத ஒன்று. ஆளுநர் பேச்சுக்கு எதிராக களேபரம் செய்து கோஷம் எழுப்பும் போது சபாநாயகர் தடுக்காமல் அவர்களை வேடிக்கை பார்த்தார்.

ஆளுநர் இருக்கும் போது!: ஆளுநர் உரையின் தமிழாக்கமான சபாநாயகர் உரைக்குப் பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் மற்றும் அமர்வு ஒத்திவைக்கப்பட வேண்டும். ஆனால், சபை மரபை மீறி முதலமைச்சர் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது. சபை விதிகளின்படி இல்லை, அவை மரபை மீறிய செயல்.

சபாநாயகர் சபையின் தலைவராக இருந்தாலும் அரசியலமைப்புச் சட்டத்தின் தலைவராக உள்ள ஆளுநரின் பேச்சை சபைக்குறிப்பிலிருந்து நீக்குவது என்பது சட்ட வல்லுநர்கள் முன் உள்ள தீவிர விவாதப் பொருளாகும்" என ஆளுநர் மாளிகை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: TN Assembly: தமிழில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி.. ஆளுநருக்கு எதிராக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு!

Last Updated : Jan 9, 2023, 6:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.