ETV Bharat / state

தலைமை அலுவலகத்தை கொள்ளையடித்த ஓபிஎஸ்? - ஈபிஎஸ் ஆதரவாளர் காவல் நிலையத்தில் புகார்

author img

By

Published : Jul 12, 2022, 10:16 AM IST

அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், விலை உயர்ந்த பொருள்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றதாக கூறி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அதிமுக சென்னை மாவட்ட செயலாளர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதிமுக அலுவலகத்தில் கொள்ளையடித்த ஓபிஎஸ்; மாவட்ட கழக செயலாளர் காவல் நிலையத்தில் புகார்
அதிமுக அலுவலகத்தில் கொள்ளையடித்த ஓபிஎஸ்; மாவட்ட கழக செயலாளர் காவல் நிலையத்தில் புகார்

சென்னை: ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் நேற்று (ஜூலை 11) மாறி மாறி கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் போலீசார் உட்பட 42 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 14 அதிமுகவினர் கைது செய்யப்பட்டு, அதிமுக தலைமை அலுவலகத்தை வில்லங்க சொத்தாக அறிவித்து, வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்து சென்றனர்.

இந்நிலையில், ஈபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக தென்சென்னை மாவட்ட செயலாருமான ஆதிராஜாராம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "கடந்த 8ஆம் தேதி சமூக விரோதிகள் சிலர் அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைய போவதாக வந்த தகவலை அடுத்து, பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் ராயப்பேட்டை அலுவலகத்தில் ஏற்கெனவே மனு அளித்திருந்தோம்.

இதைத்தொடர்ந்து, நேற்று காலை அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைப்பற்றப்போவதாக தகவல் வந்து அங்கு சென்றோம்.

அப்போது, அங்கு ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகரன், மனோஜ் பாண்டியன், புகழேந்தி ஆகியோர் வந்தனர். ஓ.பன்னீர்செல்வம் மைக்கில் யாராக இருந்தாலும் வெட்டுங்கள் என கூறியதின் அடிப்படையில், சுமார் 300 நபர்கள் கற்கள், கத்தி, கட்டை, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் அதிமுக தொண்டர்களையும், பொதுமக்களையும் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்தின் உத்தரவின் பேரில் தலைமை அலுவலக கதவை கடப்பாறை கொண்டு உடைத்து உள்ளே இருந்த பொருள்களை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. மேலும் தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், விலை உயர்ந்த பொருள்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதனால், கொலைவெறி தாக்குதல் நடத்தி அலுவலகத்தில் இருந்து கொள்ளையடித்து சென்ற முக்கிய ஆவணங்கள், விலையுயர்ந்த பொருட்களை மீட்டு கொடுத்து, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச்செயலாளர் அந்தஸ்து ரத்து! - பொதுக்குழுவில் நடந்த மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.