ETV Bharat / state

எதிர்கட்சிகளின் கருத்துகள் நேரலையில் ஒளிபரப்பாமல் இருட்டடிப்பு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

author img

By

Published : Apr 12, 2023, 3:54 PM IST

எதிர்கட்சிகள் பேசக்கூடிய கருத்துக்கள், கேள்விகள் மற்றும் மக்கள் பிரச்னைகள் ஆகியவை நேரலையில் ஒளிபரப்பப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும், தமிழ்நாடு சட்டப்பேரவை நடுநிலையாக செயல்படவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகளின் கருத்துகள் நேரலையில் ஒளிபரப்பாமல் இருட்டடிப்பு செய்யப்படுகிறது - ஈபிஎஸ் கண்டனம்!
எதிர்கட்சிகளின் கருத்துகள் நேரலையில் ஒளிபரப்பாமல் இருட்டடிப்பு செய்யப்படுகிறது - ஈபிஎஸ் கண்டனம்!

சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில், கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் 5 வயது குழந்தை திமுக கவுன்சிலரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் உரையாற்றினார். அப்போது நேரடி ஒளிபரப்பு முடக்கப்பட்டதாக எதிர்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய எஸ்.பி.வேலுமணி, “பாலியல் வன்புணர்வு தொடர்பாக முதலமைச்சர் பேசும்போது நேரலை ஒளிபரப்பாகிறது. ஆனால் அந்த தீர்மானத்தைக் கொண்டு வந்த எதிர்கட்சித் தலைவர் பேசும்போது மட்டும் நேரலை கட் செய்யப்படுகிறது. இதை யாரோ வேண்டும் என்றே செய்கிறார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதனையடுத்து எதிர்கட்சித் தலைவர் பேசுவதை நேரலை செய்யாத காரணத்தினால், அதிமுக வெளிநடப்பு செய்வதாக தெரிவித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “இன்றைய தினம் சட்டப்பேரவையின் நேரமில்லா நேரத்தில், விருத்தாச்சலத்தில் நடைபெற்ற பாலியல் வன்புணர்வு தொடர்பாக பேசினேன். குழந்தையின் நிலை குறித்து விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அரசு மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலத்தில் 1ஆம் வகுப்பு படிக்கின்ற பெண் குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில், அந்த குழந்தை சேர்க்கப்பட்டது.

நேற்று (ஏப்ரல் 11) இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது முதலமைச்சர், அவரை (பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டில் கைதானவர்) கட்சியை விட்டு நீக்கி இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார். இன்று காலை 9 மணி வரை, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. அந்தப் பள்ளியின் உரிமையாளரும், விருத்தாச்சலம் நகராட்சியின் 30வது வார்டு திமுக கவுன்சிலருமான பத்கிரிசாமியை விருத்தாச்சலம் காவல் துறையினர் அழைத்துச் சென்றார்கள்.

அழைத்துச் சென்றும், அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல், பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. பிஞ்சுக் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். விருத்தாச்சலத்தில் நடைபெற்ற இந்த சம்பவம், கொடூரமான சம்பவம். பள்ளியின் உரிமையாளரே குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது திறமையற்ற அரசாங்கம் என்பது, இதன் மூலம் தெரிகிறது.

இந்த குழந்தைக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான சம்பவத்தை சட்டமன்றத்தில் பேசும்போது, அதனை நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இதனால் எதிர்கட்சிகள் பேசக்கூடிய மக்கள் பிரச்னைகளை, மக்கள் அறிந்து கொள்ள முடியவில்லை. பாலியல் புகார் உள்ளானவர் திமுகவைச் சேர்ந்தவர், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர். அவர் மீது நடவடிக்கை எடுக்க காலதாமதமானது. இது கண்டிக்கத்தக்கது. பெண் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள நிகழ்வுக்கு, தற்போது மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

நேரமில்லா நேரத்தில் நான் பேசிய பேச்சுக்கள், நேரலையில் வரக் கூடாது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நேரலையை முடக்கி உள்ளனர். சபாநாயகர், ஆளுங்கட்சியின் சிக்னலை பார்த்து செயல்படுகிறார். அவர் (சபாநாயகர்) நடுநிலையாக செயல்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும், சட்டப்பேரவையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் நேரலை செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர், அமைச்சர்கள் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்வதைப்போல், எதிர்கட்சித் தலைவர் பேசுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். ஏன் அதை நிறைவேற்றவில்லை? கேள்வியை ஒளிபரப்பாமல், பதிலை மட்டும் ஒளிபரப்பினால் மக்களுக்கு எப்படி தெரியும்? ஒவ்வொரு ஆட்சியிலும் எதிர்கட்சித் தலைவராக இருப்பவர் வராதபோது, எதிர்கட்சி துணைத் தலைவராக இருப்பவர்தான் சட்டப்பேரவையில் செயல்படுவது வழக்கம்.

கட்சி விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு முடிந்த பின்னரும், எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஒதுக்காதது ஏன்? திமுக அரசு, ஒரு சர்வாதிகார அரசாக செயல்படுகிறது. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. 60க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவுக்கு துணைத் தலைவர் இருக்கை ஏன் வழங்கவில்லை? கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் குழந்தை பாலியல் துன்புறுத்தல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டது குறித்து, நேற்று (ஏப்ரல் 11) இரவே பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

சம்பவம் நடந்து 13 மணி நேரம் ஆன பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 13 மணி நேரம் அந்தப் பகுதியில் காவல் துறை இல்லையா அல்லது காவல் துறை செயல்படவில்லையா? அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் 5 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவித்து, அதில் 90 சதவீதம் பேருக்கு கொடுத்தோம். ஆனால் தற்போது திமுக ஆட்சியில், 7 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. உதவித்தொகை நிறுத்தப்பட்டவை குறித்து ஆய்வு நடத்த வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக கவுன்சிலர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.